ஜூட் சமந்த
‘டிட்வா’ (Ditwa) சூறாவளியினால் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு மற்றும் புத்தளம் இடையிலான ரயில் சேவைகள், இன்று (16ஆம் திகதி) அதிகாலை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக நிலவிய ‘டிட்வா’ சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக கொழும்பு – புத்தளம் ரயில் பாதையின் பல இடங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக வலஹாபிட்டிய, குடாவெவ, மானுவங்கம, பத்துலுஓயா, தில்அடிய ஆகிய பகுதிகளில் ரயில் தண்டவாளங்களுக்கு சேதம் ஏற்பட்டிருந்தது. இதன் காரணமாக அந்தப் பாதையிலான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டிருந்தது.
கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட சேவைகள்
சூறாவளி பாதிப்புக்கு பின்னர், ரயில் சேவைகள் படிப்படியாக வழமைக்குக் கொண்டுவரப்பட்டன. முதலில் நீர்கொழும்பு, கொச்சிக்கடை மற்றும் நாத்தாண்டிய வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள், கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி சிலாபம் வரை நீடிக்கப்பட்டன. எனினும், சிலாபம் முதல் புத்தளம் வரையான ரயில் சேவைகள் இன்று (16ஆம் திகதி) வரை இடைநிறுத்தப்பட்டிருந்தன.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர், இன்று அதிகாலை 4.30 மணியளவில் புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கி அலுவலக ரயில் (Office Train) பயணிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. சூறாவளி அனர்த்தம் ஏற்பட்ட நாள் முதல் இந்த ரயில் புத்தளம் ரயில் நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமையால் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, குறித்த ரயில் இன்று காலை பயணிகளின்றி புத்தளத்திலிருந்து கொழும்பு நோக்கித் திருத்தப் பணிகளுக்காக அனுப்பப்பட்டது.
அதேவேளை, இன்று அதிகாலை 4.00 மணியளவில் கொழும்பு கோட்டையிலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த அலுவலக ரயிலே, சூறாவளி அனர்த்தத்திற்குப் பின்னர் புத்தளம் வரை சென்ற முதலாவது ரயில் ஆகப் பதிவாகியுள்ளது.


