கொழும்பு மாநகர சபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு, பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்வதற்கான கால அவகாசம் 2026 மார்ச் 16 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கு உட்படுத்தப்படும் காலப்பகுதியும் குற்றச்சாட்டுகளும்: 2010 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு மாநகர சபைக்குள் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல்வேறு முறைகேடுகள் குறித்து இந்த ஆணைக்குழு விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக பின்வரும் விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளது:
• ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம்.
• அதிகாரம், அரசாங்க சொத்துக்கள் மற்றும் சலுகைகளை முறையற்ற வகையில் பயன்படுத்துதல் அல்லது துஷ்பிரயோகம் செய்தல்.
• சட்டவிரோத ஆட்சேர்ப்பு, நியமனங்கள் மற்றும் கொள்முதல் வழிகாட்டல்களை மீறுதல்.
• அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடுவதில் இடம்பெற்ற முறைகேடுகள்.
• முறையான நடைமுறைகளை மீறி முன்னெடுக்கப்பட்ட வழக்கு நடவடிக்கைகள் மற்றும் இணக்கப்பாடுகள்.
• மேற்குறிப்பிட்ட காரணங்களால் அரசாங்கத்தின் சொத்துக்களுக்கு அல்லது வருமானத்திற்கு ஏற்பட்ட பாரிய இழப்புகள்.
முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் வழிமுறைகள்:
இது தொடர்பான எழுத்து மூலமான முறைப்பாடுகள் அல்லது தகவல்களை தமிழ், சிங்களம் அல்லது ஆங்கிலம் ஆகிய ஏதேனும் ஒரு மொழியில், செயலாளர், ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, இலக்கம் 152, காலி வீதி, கொழும்பு 03. என்ற விலாசத்திற்கு சமர்ப்பிக்க முடியும்.
முறைப்பாடு செய்பவரின் பெயர், முகவரி, தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கம் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
முறைப்பாடு செய்பவர் தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பவில்லை எனில், அதனை இரகசியமாக வைத்திருக்குமாறு ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்க முடியும்.
மேலும், வாய்மூலமாக தகவல்களை வழங்க விரும்பும் நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள், 011 2 301 735 என்ற தொலைபேசி இலக்கத்தைத் தொடர்பு கொண்டு, 2026 மார்ச் 16 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னரான ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


