நீதிபதிகள் ஓய்வுபெறும் வயது சர்ச்சை: இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் – ஜனாதிபதி சந்திப்பில் நடந்தது என்ன?
மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பதற்காக உத்தேசிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் அண்மையில் இடம்பெற்ற உயர்நிலைக் கலந்துரையாடலின் முழுமையான காணொளிப் பதிவுகள் தமக்கு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்று , இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் (BASL) உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளது.
பல கட்டங்களாக முன்னெடுக்கப்பட்ட இந்தச் சந்திப்பின்போது, உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தினால் நாட்டின் நீதித்துறையின் சுயாதீனத்திற்கு ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்துச் சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள் விரிவாகச் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கலந்துரையாடலைத் தொடக்கி வைத்த சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய, நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை ஆணித்தரமாக எடுத்துரைத்தார். குறிப்பாக, மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிக்கும் எந்தவொரு தீர்மானத்தையும் அவசர கதியில் முன்னெடுக்கக் கூடாது எனச் சுட்டிக்காட்டிய அவர், துறைசார்ந்த அனைத்துத் தரப்பினருடனும் போதுமான ஆலோசனைகளும் கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியத்தை அழுத்தம் திருத்தமாகத் தெளிவுபடுத்தினார்.
இதனைத் தொடர்ந்து, சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன மேலதிக விடயங்களைச் சமர்ப்பித்தார். அத்துடன், பேராசிரியர் சாவித்திரி குணசேகர மற்றும் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டு, இந்த அரசியலமைப்புத் திருத்தத்தால் நீதித்துறையின் கட்டமைப்புக்கு ஏற்படக்கூடிய சவால்கள் குறித்துத் தமது கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
நீதித்துறை தொடர்பான எந்தவொரு அரசியலமைப்பு மாற்றத்தையும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர், ஆழமான பரிசீலனையும் பரந்தளவிலான கலந்தாலோசனைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற தமது நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் நேரடியாக எடுத்துரைப்பதே இச்சந்திப்பின் பிரதான நோக்கமாக அமைந்திருந்ததாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது நீடிப்பு திருத்தத்திற்கு எதிராக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மேற்கொண்ட தீர்மானங்கள் மற்றும் அவற்றின் பின்னணியை அறிந்துகொள்ள இக்காணொளி பயனுள்ளதாக இருக்கும்.


