இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாம்; ஆரம்பித்துவைத்தார் தூதுவர் காலித் ஹமூத் அல்கஹ்தானி..!
– எஸ். சினீஸ் கான் –
“சவூதி நூர்” தன்னார்வத் திட்டத்தின் மூலம் கிழக்கு மாகாணத்தில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் நடைபெற்று வரும் இலவச கண்புரை சத்திர சிகிச்சை முகாமை இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள், நேரில் சென்று இன்று (17) பார்வையிட்டார்.
கண்சார்ந்த நோய்களை குணமாக்க இலவசமாக முன்னெடுக்கப்படும் இத்திட்டம், கிங் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண மையத்தினால் செப்டம்பர் 15 முதல் 21 ஆம் திகதி வரை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறும்.
இந்நிகழ்வில் உரையாற்றிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, மனிதாபிமான பணிகளை உலகம் முழுவதும் மேற்கொள்வதில் சவூதி அரேபியாவின் அடிப்படை மதிப்புகளே பிரதிபலிக்கின்றன எனக் குறிப்பிட்டார்.
குறிப்பாக சுகாதார துறையில் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு, இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் மற்றும் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகம்மது பின் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அல் சௌத் ஆகியோரின் தலைமையில் சவூதி அரசு வழங்கி வரும் அக்கறையை அவர் பாராட்டினார்.
மேலும், மன்னர் சல்மான், பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான், கிங் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம், அல்-பஸர் சர்வதேச அமைப்பு, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் பணியாளர்களுக்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தார்.
அதேபோன்று, சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் பிரபாஷங்கர் அவர்கள் உரையாற்றுகையில்,
இலங்கைக்கு வழங்கப்பட்ட இம்மனிதாபிமான உதவிக்காக சவூதி அரசின் தலைமைத்துவத்திற்கும், குறிப்பாக மன்னர் சல்மான் மற்றும் பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மானுக்கும் நன்றியைத் தெரிவித்தார். மேலும், இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால நட்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்த தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி அவர்கள் செய்துவரும் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.
அவ்வாறே, செப்டம்பர் 22 முதல் 28 ஆம் திகதி வரை, சவூதி நூர் திட்டத்தின் அடுத்த கட்ட முகாம் எம்பிலிபிடிய அரச வைத்தியசாலையில் நடைபெறவுள்ளது.


