வரலாற்றில் முதற் தடவையாக முஸ்லிம் அல்லாத ஒருவரை சவூதி அரேபியாவின் ஜித்தாவிற்கான கொன்சலேட் ஜெனரலாக நியமிக்க வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுல்லா அமைச்சர் விஜித ஹேரத் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் பரவி வருகின்றன.
இதற்கமைய, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளர் டி.டி.பீ. சேனாநாயக்கவினை ஜித்தாவிற்கான கொன்சலேட் ஜெனரலாக நியமிக்க அமைச்சர் விஜித ஹேரத் நடகடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றமையினால் அவரை குறித்த பதவியிலிருந்து நீக்கும் நோக்கிலேயே ஜித்தாவிற்கான கொன்சலேட் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புனித மக்கா, மதீனா மற்றும் அதனுடன் தொடர்புடைய நகரங்களை நிர்வகிக்கும் நோக்கிலும், புனித ஹஜ் கடமையினை நேரடியாக கண்காணிக்கும் வகையிலுமே ஜித்தாவிற்கான கொன்சலேட் ஜெனரல் நியமிக்கப்படுவது வழமையாகும்.
புனித மக்கா நகரிற்குள் முஸ்லிம் அல்லாத ஒருவர் நுழைய முடியாது என்பதனால் அனைத்து நாடுகளும் இப்பதவிக்கு முஸ்லிம் ஒருவரை நியமிப்பதே வழமையாகும்.
எனினும், அமைச்சர் விஜித ஹேரத் இந்த சம்பிரதாயத்தினை மீறி முஸ்லிம் அல்லாத ஒருவரை ஜித்தாவிற்கான கொன்சலேட் ஜெனரலாக நியமித்துள்ளமை முஸ்லிம்கள் மத்தியில் பாரிய அதிர்வலையை உருவாக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் சவூதிக்கான இலங்கைத் தூதுவராக வீ. கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப்பட்டு பின்னர் அந்நாட்டின் கடுமையான அழுத்தம் காரணமாக ஆறு மாதங்களின் பின்னர் அவர் திருப்பி அழைக்கப்பட்டமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.


