இலங்கை கடற்படையினர், புலனாய்வு சேவை, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மற்றும் பிராந்திய செயல்பாட்டு ஒருங்கிணைப்பு மையம் ஆகியன இணைந்து மேற்கொண்ட விஷேட சுற்றிவளைப்பில், இலங்கையின் தெற்கே ஆழ்கடலில் போதைப்பொருட்களை கொண்டு சென்ற இரண்டு உள்ளூர் மீன்பிடி படகுகளுடன் பதினொரு (11) சந்தேக நபர்கள் இன்று கைது செய்யப்பட்டனர்.
குறித்த, நீண்ட நாள் மீன்பிடி படகுகள் டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு இன்று (2025 மே 28) பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் நிபுணர்களின் உதவியுடன் கொண்டுவரப்பட்டதுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர (ஓய்வு), கடற்படைத் தளபதி மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் பங்குபற்றலுடன் குறித்த போதைப்பொருள் சோதனையிடப்பட்டது.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் நிபுணர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணையில், ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருள் குறித்த படகுகளிலிருந்து மீட்கப்பட்டது.
இரண்டு (02) படகுகளில் இருந்து சுமார் 503 கிலோகிராம் 618 கிராம் ஐஸ் மற்றும் சுமார் 275 கிலோகிராம் 594 கிராம் ஹெரோயின் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்படி போதைப்பொருட்கள், சந்தேக நபர்கள் மற்றும் பல நாள் மீன்பிடி ஈடுபட்ட படகுகள் இன்று (2025 மே 28) மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டன.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம், இலங்கை கடற்படை, மற்ற தரப்பினருடன் இணைந்து, 2025 ஆம் ஆண்டில் இதுவரை நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கைகளின் மூலம் 544 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 1217 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளை கைப்பற்றியுள்ளதுடன், எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து மீட்பதற்காக கடற்படை தொடர்ந்து இதுபோன்ற கூட்டு நடவடிக்கைகளுக்கு பங்களிக்கும் என இதன்போது தெரிவிக்கப்பட்டது.
