இலங்கைக்குத் தேவையான 92 ரக பெட்ரோல் விநியோகத்திற்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த M/s. Epdesa Pte. Ltd. நிறுவனத்துடன் நீண்டகால ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தலா 300,000 (± 5%) பீப்பாய்கள் கொண்ட 05 கப்பல் பெட்ரோல் தொகுதிகளை கொள்வனவு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விநியோகங்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 14 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெறவுள்ளன.
இலங்கை கனிப்பொருள் எண்ணெய் கூட்டுத்தாபனத்தில் (CPC) பதிவு செய்யப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து இதற்கான விலைமனுக்கள் கோரப்பட்டிருந்தன. இதில் மொத்தம் 06 விநியோகஸ்தர்கள் தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருந்தனர்.
சமர்ப்பிக்கப்பட்ட விலைமனுக்களை மதிப்பீடு செய்த உயர் மட்ட நிலையான கொள்முதல் குழுவின் பரிந்துரைக்கமைய, குறைந்த விலையை முன்வைத்த (Lowest Responsive Bidder) சிங்கப்பூரின் M/s. Epdesa Pte. Ltd. நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தத்தை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி அவர்கள் சமர்ப்பித்த இந்த முன்மொழிவுக்கு அமைச்சரவை தனது உத்தியோகபூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


