ஜூட் சமந்த
சிலாபம் – அம்பகந்தவிலவில் பாரிய சைபர் குற்றச்செயல் முறியடிப்பு: 150 வெளிநாட்டவர்கள் கைது
சிலாபம், அம்பகந்தவில பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் தங்கியிருந்த 150 வெளிநாட்டுப் பிரஜைகள், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி இரவு முன்னெடுக்கப்பட்ட இந்த விசேட சுற்றிவளைப்பின் போது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் சீனர்கள்: 129 ஆண்கள் மற்றும் 06 பெண்கள், வியட்நாமியர்கள்: 10 ஆண்கள் மற்றும் 03 பெண்கள், தாய்வான்: ஒரு பெண், மலேசியா: ஓர் ஆண் அடங்குகின்றனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பெருமளவிலான மின்னணு சாதனங்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இதில் 99 டெஸ்க்டாப் கணினிகள், 26 மடிக்கணினிகள் (Laptops) மற்றும் 259 கையடக்கத் தொலைபேசிகள் உள்ளடங்குகின்றன.
குறித்த வெளிநாட்டவர்கள் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே அம்பகந்தவில பகுதியில் உள்ள இந்த சுற்றுலா விடுதிக்கு வந்து தங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி பிரிவினர் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.
இவர்கள் தங்கியிருந்தவாறே கணினி ரீதியான குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என பொலிஸார் பலமாக சந்தேகிக்கின்றனர். தற்போது கைது செய்யப்பட்டுள்ள அனைவரும் அந்த விடுதியிலேயே தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



