நாட்டில் சமையல் எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், சந்தையில் எரிவாயுவைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
போதுமான அளவு எரிவாயு கொள்கலன்கள் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகத் துறைசார் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டாலும், சில்லறை விற்பனை நிலையங்களில் “எரிவாயு இல்லை” என்ற பதிலே கிடைப்பதாக நுகர்வோர் கவலை தெரிவிக்கின்றனர்.
வீடுகளில் சமையல் எரிவாயு தீர்ந்துள்ள நிலையில், மாற்று வழியின்றி உணவகங்களிலிருந்து உணவைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இது நடுத்தர வர்க்கக் குடும்பங்களின் நாளாந்தச் செலவுகளைப் பாரியளவில் அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
இது குறித்துக் கருத்து வெளியிட்டுள்ள நுகர்வோர் உரிமைப் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர், “நுகர்வோர் முறையான வைப்புத் தொகையை (Deposit) செலுத்தியே எரிவாயு கொள்கலன்களைப் பெற்றுள்ளனர். எனவே, அவர்களுக்குத் தடையின்றி எரிவாயுவை வழங்க வேண்டிய சட்டரீதியான பொறுப்பு எரிவாயு நிறுவனங்களுக்கு உண்டு” என வலியுறுத்தியுள்ளார்.


