2020 ஒக்டோபரில் சீனி மீதான ஐம்பது ரூபாய் வரியை 25 சதங்களாக குறைத்தது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் எந்த குற்றவியல் குற்றமும் கண்டறியப்படவில்லை என்று சட்டமா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு நேற்று (12) கொழும்பு மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, குறித்த விசாரணைகளை முடிக்க அனுமதி வழங்கிய நீதவான், இந்த சம்பவத்தில் ஏதேனும் ஊழல் அல்லது இலஞ்சம் வெளிப்பட்டால், வழக்கு கோப்புகளை விசாரணைக்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பலாம் என்று தெரிவித்தார்.
2020 ஒக்டோபர் 13 நள்ளிரவு முதல் சீனி மீதான செஸ் வரியை ரூ.50-ல் இருந்து 25 சதங்களாக குறைக்க அரசாங்கம் எடுத்த முடிவின் விளைவாக அரசுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தக் கோரி முறைப்பாடு அளிக்கப்பட்டது.
அப்போது, சீனி வரியைக் குறைக்கும் முடிவால் அரசுக்கு 1,600 மில்லியன் ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்பட்டதாகவும், வரி குறைப்பின் பலனை மக்கள் பெறாமல் மிகப்பெரிய சீனி வரி மோசடி நடந்துள்ளதாகவும் பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
அதன் பின்னர், குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இது தொடர்பில் விசாரணைகளை நடத்தி, அனைத்துப் பகுதிகளையும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பித்தது.
அவற்றைப் படித்த பிறகு, இந்த விசாரணையின் மூலம் எந்தவொரு குற்றவியல் குற்றமும் அடையாளம் காணப்படவில்லை என்று சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தெரிவித்திருந்தார்.
சீனி வரியைக் குறைப்பதன் மூலம் எந்தவொரு தரப்பினரோ அல்லது தனிநபரோ தேவையற்ற இலாபத்தைப் பெற்றுள்ளனரா அல்லது ஊழல் குற்றத்தைச் செய்துள்ளனரா என்பதை விசாரிக்கவும், சீனி வரியைக் குறைப்பதன் மூலம் ஏதேனும் இலஞ்சம் அல்லது பிற பரிவர்த்தனை நடந்துள்ளதா என்பதை மேலும் விசாரித்து கண்டறியவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சட்டமா அதிபர் மேலும் அறிவுறுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலித்த மேலதிக நீதவான், சீனி வரி குறைப்பு செயல்முறை தொடர்பான விசாரணை அறிக்கைகளை மேலும் விசாரிக்கவும், தேவைப்பட்டால் வழக்கு கோப்புகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி குற்றவாளிகளைக் கண்டறியவும் உத்தரவிட்டார்.