நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில், ஊடகங்கள் மற்றும் மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் எழுதப்பட்ட திறந்த மடலொன்று இன்று சமூக வலைத்தளங்களிலும் இணைய ஊடகங்களிலும் பெருமளவில் வைரலாகி வருகின்றது. ‘டெய்லி மிரர்’ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த பகிரங்கக் கடிதம், தற்போதைய ஆட்சியின் செயற்பாடுகள் மற்றும் ஊடகங்கள் மீதான பார்வை குறித்த முக்கிய விவாதங்களைத் தோற்றுவித்துள்ளது.
தவறு செய்தவர்களுக்கும் ஊழல்வாதிகளுக்கும் எதிராக ஜனாதிபதி எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகள் தினமும் மக்களால் பாராட்டப்பட்டு வருகின்ற போதிலும், நாட்டின் சாமானிய மக்கள் எதிர்கொள்ளும் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் துயரங்கள் புறக்கணிக்கப்படக் கூடாது என்பது இந்த மடலின் பிரதான செய்தியாகும். “ஜனாதிபதி அவர்களே, உங்களது அலுவலக ஜன்னல் வழியே வெளியே பாருங்கள்; உங்களது மக்களின் அன்றாடப் போராட்டங்களையும் துயரங்களையும் காதுகொடுத்துக் கேளுங்கள்” என்ற கோரிக்கை அதில் ஆழமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஊடகங்கள் தொடர்பாக ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கருத்துக்களுக்கு இதில் காட்டமான பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்கள் அரசாங்கத்தின் எதிரிகள் அல்ல என்றும், அவை குறிப்பிடப்பட்டது போல எந்தவொரு “குப்பை மேட்டிலும்” இல்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதேநேரம், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சர்கள் ஊடகங்களை எதிர்கொள்வதற்கும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும் தேவையான தைரியம் இல்லாமல் விலகி ஓடுவதாகவும் இதில் விமர்சிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் அவரது தேசிய மக்கள் சக்தி (NPP) தரப்பினர், ஊடக நிறுவனங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் தங்களுக்கு எதிராகப் போலிச் செய்திகளையும், தவாறான அரசியல் பரப்புரைகளையும் மேற்கொண்டு வருவதாக நாடாளுமன்றத்திலும் பொதுக் கூட்டங்களிலும் கடுமையாகச் சாடினர். ஊடகங்கள் பொறுப்புடன் செயல்படாவிடில் சட்டம் பாயும் என்ற அரசாங்கத்தின் தொனி ஊடகச் சுதந்திரத்தை முடக்கும் முயற்சியோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொதுவான ஊடகச் சுதந்திர வாக்குறுதிகளுக்கு மத்தியில், சமூக ஊடகங்களில் ஜனாதிபதி மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக அவதூறு அல்லது போலித் தகவல்களைப் பரப்புபவர்களை அவசரகாலச் சட்ட விதிகளின் (Emergency Regulations) கீழ் கைது செய்யுமாறு பொதுப் பாதுகாப்பு அமைச்சின் மூலம் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், பேரிடர் மேலாண்மைக்கு மட்டுமே அவசரகாலச் சட்டம் பயன்படுத்தப்படும் என்ற ஜனாதிபதியின் முந்தைய வாக்குறுதிக்கு இது முரணாக இருப்பதாக சிவில் அமைப்புகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் கடந்த காலப் பழிவாங்கல்களுக்குப் பொறுப்புக்கூறுவதைத் தவிர்ப்பதாகவும், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் விமர்சனக் குரல்களை எழுப்பும் ஊடகவியலாளர்களை மௌனிக்கச் செய்யும் வகையில் அடக்குமுறைகளைக் கையாள்வதாகவும் Civicus Monitor போன்ற சர்வதேச மனித உரிமை கண்காணிப்பு அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
குறுகிய காலத்தில் ஆட்சி அமைத்துள்ள போதிலும், முந்தைய ஆட்சியாளர்களிடமிருந்து மாறுபட்ட ஒரு தலைவராகவே ஜனாதிபதி அநுரகுமார தன்னை நிரூபித்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை, உண்மையை தைரியமாக எதிர்கொள்ளும் பண்பை தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த திறந்த மடல் தற்போது இலங்கையின் அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அரசாங்கத்தின் அடுத்தகட்ட நகர்வுகள் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பையும் மக்களிடையே அதிகரித்துள்ளது.


