இலங்கை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையிலான கருத்துக்களை அமைச்சர் கே.டி. லால் காந்த கண்டியில் வைத்து வெளிப்படுத்தியுள்ளார். தற்போதைய அரசாங்கம் நாட்டைத் தொடர்ந்தும் வழிநடத்தும் எனவும், இதில் ஜனாதிபதி மாறினாலும் கூட அரசாங்கம் ஒருபோதும் மாறாது எனவும் அவர் மிக ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இந்த அரசியல் குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அத்துடன் தனது எதிர்கால அரசியல் குறித்த ஒரு அதிரடி முடிவையும் அவர் இதன்போது பகிரங்கப்படுத்தினார்.
எதிர்காலத்தில் கண்டி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி எந்தவொரு பாராளுமன்றத் தேர்தலிலும் தான் களமிறங்கப் போவதில்லை என அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். நாட்டுக்குச் சேவை செய்வதற்காக அரசியலில் ஈடுபடவோ அல்லது பாராளுமன்றத்திற்குள் செல்லவோ வேண்டிய அவசியம் இல்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அப்படியாயின், இவர் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டதன் பின்னணி என்ன? அதற்கான காரணத்தையும் அமைச்சர் மறைக்காமல் உடைத்துக் கூறியுள்ளார். ஜனாதிபதி விடுத்த கடுமையான அழுத்தமும் வற்புறுத்தலுமே, தான் கடந்த தேர்தலில் கண்டி மாவட்டத்தில் போட்டியிட்டதற்கான ஒரே காரணம் என அவர் வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தமது கட்சியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா ஒருபோதும் தேர்தலில் போட்டியிடவில்லை என்ற போதிலும், தொடர்ந்தும் தீவிர அரசியலில் களமிறங்கிச் செயற்பட்டு வருவதை அவர் ஒரு முன்னுதாரணமாகச் சுட்டிக்காட்டினார்.
கட்சியை விட்டு விலகுவது குறித்த வதந்திகளுக்கும் அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியை விட்டு வெளியேறப் போவதில்லை எனக் குறிப்பிட்ட அவர், கடந்த காலங்களில் கட்சியைப் பிளவுபடுத்திச் சென்ற சிலரால் கூட, கட்சியின் அத்திவாரத்தை ஒருபோதும் அசைக்க முடியாமல் போனது என்பதையும் கடுமையாக நினைவூட்டினார்.


