ஜூட் சமந்த
தங்கொட்டுவ பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில், சக மாணவன் ஒருவனால் கடதாசி வெட்டும் கத்தியால் (Paper cutter) தாக்கப்பட்டு மாணவர் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இச்சம்பவம் கடந்த 06 ஆம் திகதி மதிய வேளையில் பாடசாலை வளாகத்தினுள்ளேயே இடம்பெற்றுள்ளது. தாக்குதலுக்குள்ளான மாணவன் தங்கொட்டுவ – மாவத்தகம பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய கே. கவிந்து நிம்சார என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது மேலதிக சிகிச்சைக்காக நீர்கொழும்பு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்த மாணவனும், தாக்குதலை நடத்திய மாணவனும் அதே பாடசாலையில் ஒரே வகுப்பில் கல்வி பயின்று வருபவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விரு மாணவர்களுக்கும் இடையில் பாடசாலையில் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளதாக ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் இடம்பெற்ற தினமான கடந்த 6ஆம் திகதி இவர்களுக்குள் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், ஒரு மாணவன் மற்றைய மாணவனின் கையை கடதாசி வெட்டும் கத்தியால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.
இந்தக் கத்திக்குத்து சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து தங்கொட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


