ஜூட் சுமந்த
சமூக ஊடகங்கள் ஊடாக அறிமுகமான 15 வயது சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 22 வயது இளைஞர் ஒருவரை உடப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் முந்தலமை – பள்ளிவாசல்பாடு பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
பாதிக்கப்பட்ட சிறுமி அனுராதபுரத்தைச் சேர்ந்தவர் என்பதுடன், அவரது தாய் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
தந்தை பராமரிப்பில் இருந்த சிறுமிக்கு, அவரது தாய் நவீன ரக கையடக்கத் தொலைபேசி ஒன்றை அனுப்பியுள்ளார். அத்தொலைபேசி ஊடாக சமூக ஊடக கணக்கைப் பயன்படுத்திய போதே சந்தேகநபரான இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதன்போது சிறுமி தனது வயது 17 என அந்த இளைஞரிடம் பொய்யாகக் கூறியுள்ளதோடு, அது பின்னர் காதலாக மாறியுள்ளது.
கடந்த போயா தினத்தன்று இவர்கள் இருவரும் முதன்முதலாக அனுராதபுரத்தில் இரகசியமாகச் சந்தித்துள்ளனர். அதன் பின்னர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் திகதி இரவு, சிறுமி தனது தந்தைக்குத் தெரியாமல் பேருந்து மூலம் மதுரங்குளிக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து தனது காதலரின் முச்சக்கர வண்டியில் அவரது வீட்டிற்குச் சென்ற சிறுமி, அன்றிலிருந்து அவருடன் தங்கியிருந்துள்ளார்.
காணாமல் போன தனது மகளைத் தேடி வந்த தந்தை, கடந்த 29 ஆம் திகதி முந்தலமை – பள்ளிவாசல்பாடு பகுதியில் சிறுமியைக் கண்டுபிடித்தார். அதனைத் தொடர்ந்து, அவர் மகளுடன் உடப்புவ பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்துள்ளார்.
அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் சந்தேகநபரான இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவப் பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


