ஜுட் சமந்த
மாதம்பை – இஸ்ஸம்மடில்ல பகுதியில் அமைந்துள்ள தனியார் தென்னந்தோப்பொன்றில் நேற்றைய தினம் (01) மாலை 4.00 மணியளவில், பயிர்களுக்கு நீர் பாய்ச்சும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்த இளைஞன், அடுத்த சில நிமிடங்களில் தன் வாழ்நாள் முடிவுக்கு வரும் என்பதைச் சிறிதும் எதிர்பார்த்திருக்கவில்லை.
நீர் போசர் (Bowser) பொருத்தப்பட்ட ட்ரெக்டரை இயக்கியபடி தென்னந்தோப்பின் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, நொடிப் பொழுதில் நிலமை தலைகீழாக மாறியது!
கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் கவிழ்ந்த போசர்!
தோட்டத்துப் பாதையில் இயங்கிக்கொண்டிருந்த அந்த ட்ரெக்டர், எதிர்பாராத விதமாகச் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த ஆழமான வாய்க்காலுக்குள் தூக்கி வீசப்பட்டுத் தலைகீழாகக் கவிழ்ந்தது. பாரிய போசர் இணைக்கப்பட்டிருந்ததால் ட்ரெக்டர் பலத்த சத்தத்துடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்தக் கோர விபத்தில் ட்ரெக்டரைச் செலுத்திச் சென்ற இளைஞன், வாகனத்தின் அடியில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானார்.
அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த தோட்டத்தில் பணிபுரிந்த ஏனைய தொழிலாளர்கள் மற்றும் பகுதி மக்கள் உடனடியாகச் செயல்பட்டு, காயமடைந்த இளைஞனை மீட்டுச் சிலாபம் பொது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
வைத்தியர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றப் போராடியபோதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்தது யார்? பொலிஸார் தீவிர விசாரணை!
இவ்விபத்தில் உயிரிழந்தவர் வனாத்தவில்லு – இஸ்மாயில்புர பகுதியைச் சேர்ந்த அங்கம்பொடிகே நிமேஷ் தாருக என்ற இளைஞர் என அடையாளங் காணப்பட்டுள்ளார்.
சொந்த ஊரிலிருந்து பணி நிமித்தம் மாதம்பைக்கு வந்த இடத்தில் இந்தச் சோகச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான சரியான காரணம் இயந்திரக் கோளாறா அல்லது கவனயீனமா என்பது குறித்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


