2025 மே மாதம் 19 ஆம் திகதியன்று தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெபிலியானா வீதி, நாதிமால பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வழங்கப்பட்ட தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர், அங்கிருந்த கடை ஒன்றிற்குள் புகுந்து நபர் ஒருவரை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு அவரைக் கொலை செய்துள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற குற்றச் செயல் தொடர்பில் மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இக்கொலைச் சம்பவத்தின் போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த சந்தேக நபரான 41/14, ஓபேத் பேதசம் தெஹிவளை முகவரியை சேர்ந்த, சேனாரத்னகே தனஞ்சய கெளசல்ய பெரேரா என்பவரை அடையாளம் கண்டு கைது செய்வதற்காகப் பொலிஸார் தற்போது பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோரியுள்ளனர்.
இது தொடர்பாகச் சந்தேக நபரின் தகவல்கள் மற்றும் வரைபடங்கள் அடிப்படையில் பொலிஸார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்துள்ளனர்.
சந்தேக நபர் தொடர்பான நிழற்படம் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இவரைப் பற்றிய ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களைப் பொதுமக்களுக்குக் கொண்டு செல்லுமாறு ஊடக நிறுவனங்களுக்குப் பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சந்தேக நபர் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள், அறிவிக்கப்பட்டுள்ள 071 859 6065/ 011 280 9077 தொலைபேசி எண்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியும் எனப் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


