இலங்கையை உலுக்கிக் கொண்டிருக்கும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் அட்டகாசங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்ட மாபெரும் மனிதாபிமான வேட்டை தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
‘தேசமே ஒன்றிணைவோம்’ (The Nation Together) என்ற மகுட வாசகத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய நடவடிக்கை, தற்பொழுது குற்றவாளிகளின் சிம்மசொப்பனமாக மாறியுள்ளது.
கடந்த 2025ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த அதிரடி ஆபரேஷன், நேற்று முன்தினம் (ஜூன் 25) வரை தங்குதடையின்றி தொடர்ந்துவரும் நிலையில், இக்காலப்பகுதிக்குள் மாத்திரம் முப்படையினரின் ஒத்துழைப்புடன் நாடு தழுவிய ரீதியில் 215,526 பிரம்மாண்ட சுற்றிவளைப்புத் தேடுதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
திடுக்கிடும் திருப்பமாக, இந்த சுற்றிவளைப்புகளின் போது இதுவரை 214,333 சந்தேகநபர்கள் கூண்டோடு தூக்கப்பட்டு உள்ளார்கள்.
கைதானவர்களில் சாதாரண குற்றவாளிகள் மட்டுமன்றி, சர்வதேச போதைப்பொருள் வலைப்பின்னல்களுடன் தொடர்புடைய பெரும் புள்ளிகளும் அடங்குவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மிக முக்கியமாக, 3,112 பேருக்கு எதிராக தடுத்து வைத்து விசாரணை செய்யும் உத்தரவு (Detention Orders) பெறப்பட்டு, இரகசிய இடங்களில் வைத்து வலைப்பின்னல்கள் குறித்த விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
அடுத்த கட்டமாக, குற்றவாளிகளின் முதுகெலும்பை உடைக்கும் வகையில், போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 360 நபர்களின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்குகள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேநேரம், இந்த கொடிய போதைப் பயன்பாட்டினால் சீரழிந்து போன 2,188 போதைப்பொருள் பாவனையாளர்களைக் கண்டறிந்து, அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகப் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பும் மனிதாபிமான நடவடிக்கைகளும் இணையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த ஒட்டுமொத்த ஆபரேஷனின் அதிரவைக்கும் பின்னணி என்னவென்றால், பொலிஸார் கைப்பற்றியுள்ள போதைப்பொருட்களின் மலைக்கவைக்கும் அளவுகள் தான். நாட்டின் எதிர்காலத் தலைமுறையையே அழிக்கவிருந்த பின்வரும் போதைப்பொருட்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன:
ஹெரோயின்:1,963 கிலோகிராம் 863 கிராம் ஐஸ் (Meth):2,119 கிலோகிராம் 629 கிராம் கொக்கையின்:288 கிலோகிராம் 864 கிராம் கஞ்சா:5,817 கிலோகிராம் 714 கிராம் (மேலும் 12,899,201 கஞ்சா செடிகள் அழிக்கப்பட்டுள்ளன)
குஷ் (Kush):479 கிலோகிராம் 246 கிராம் ஹாஷிஷ் (Hashish): 312 கிலோகிராம் 291 கிராம்.
இலங்கை வரலாற்றில் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக தொடுக்கப்பட்ட மிக உக்கிரமான போராக இது பார்க்கப்படுகிறது. இந்த சுற்றிவளைப்புகள் இத்துடன் நின்றுவிடப் போவதில்லை எனவும், நாட்டின் மூலை முடுக்கெங்கும் உள்ள போதைப்பொருள் வலையமைப்புகள் வேரறுக்கப்படும் வரையில் ஆபரேஷன் தொடரும் எனவும் பொலிஸ் உயர்மட்ட வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.


