மன்னார் மற்றும் வடமாகாண மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பான எழுவன்குளம் வீதி விவகாரம், நாடாளுமன்றத்தில் மீண்டும் சூடுபிடித்துள்ளது. இது வெறும் வீதி பற்றிய சர்ச்சை மட்டுமல்ல; ஒரு இனத்தின் வரலாற்று வழித்தடத்திற்கும், இயற்கைப் பாதுகாப்புக்கும் இடையிலான ஒரு தீர்க்கப்படாத போராட்டமாக உருவெடுத்துள்ளது.
மன்னார் – எழுவன்குளம் வீதி என்பது நேற்று இன்று உருவானதல்ல; இது நூற்றாண்டுகளாக மக்கள் பயன்படுத்தி வந்த ஒரு பாரம்பரிய வழித்தடம். வில்பத்து சரணாலயத்தின் ஊடாகச் செல்லும் இவ் வீதி, வடபகுதிக்கும் தென்பகுதிக்குமான தூரத்தைக் குறைக்கும் மிக முக்கிய இணைப்பாகக் கருதப்படுகிறது.
எனினும், 2010 ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் கடும் எதிர்ப்பு காரணமாக, 2018 முதல் இவ்வீதியின் பராமரிப்புப் பணிகள் முடங்கிக் கிடக்கின்றன. இது குறித்து நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நிலவும் சட்டச் சிக்கல்களைத் தெளிவுபடுத்தினார்.
2018 ஆம் ஆண்டு முதல் இவ்வீதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதுடன், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி, இவ்வீதியில் சில கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதன்படி சரணாலயப் பகுதிக்குள் பொதுப் போக்குவரத்து முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதுடன், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரைத் தவிர மற்றவர்கள் அனுமதியின்றி நுழைய முடியாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மிக முக்கியமாக, சூழலியல் சமநிலையைப் பேண இந்த வீதியை சரளைக் கல் வீதியாக மட்டுமே பராமரிக்க முடியும்; தார் இட அனுமதியில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் மற்றும் வடமாகாண மக்களுக்கு இந்த வீதி ஒரு வரப்பிரசாதம். கொழும்பு நோக்கிய பயண தூரத்தை இது பெருமளவு குறைக்கிறது. 2022 டிசம்பரில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் இதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது.
இருப்பினும், கடந்த காலங்களில் இடம்பெற்ற முறையற்ற காடழிப்புகள் மற்றும் அரசியல் தலையீடுகள் காரணமாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டிய சூழல் உருவானதை அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
தற்போது நிலவும் முட்டுக்கட்டைகளை உடைக்க, சுற்றுச்சூழல் அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து பேச்சுவார்த்தைகளை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், சட்டச் சிக்கல்களுக்கு அப்பாற்பட்டு, அத்தியாவசியத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள எந்த தடையுமில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அண்மையில் புத்தளத்தில் இடம்பெற்ற விஷேட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கலந்துகொண்ட ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களுக்கு, மன்னார் – எழுவன்குளம் வீதி குறித்து அதிகாரிகள் பிழையான தகவல்களை வழங்கி பிழையாகவே அவரை வழிநடத்தியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காஹா மஸ்தான் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இப்பாதை தொடர்பில் போடப்பட்ட வழக்கின் சில பிரதிவாதிகள், தற்போது அதிலிருந்து பின்வாங்கி, மன்னார் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாகவும், இது தொடர்பில் பாரிய சந்தேகம் தற்போது எழுந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
மக்களின் நீண்டகாலக் கனவான இந்த வீதி, இயற்கையைச் சிதைக்காமல் நவீன தொழில்நுட்பங்கள் அல்லது மாற்று வழிகள் மூலம் பயன்பாட்டுக்கு வருமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


