கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகளைத் தொடர்ந்து சுகாதாரத் துறையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, இன்று (24) காலை 8.00 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான மற்றும் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய சுகாதார அலுவலகத்தில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக, பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய பழிவாங்கும் நோக்கில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில் ஏற்கனவே சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தப்பட்ட போதிலும், இதுவரை எவ்வித தீர்வும் வழங்கப்படவில்லை என்பதே இந்த உடனடிப் போராட்டத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.
இப்போராட்டத்தின் தீவிரத்தை வெளிப்படுத்தும் வகையில், நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நிர்வாகத்திற்கு வழங்கும் அனைத்து வகையான அறிக்கைகள் மற்றும் தரவுப் பகிர்வுகளை முற்றாக இடைநிறுத்துவதற்கு செயற்குழு தீர்மானித்துள்ளது. தகவல் கட்டமைப்புகள் புதுப்பிக்கப்படுவது முடங்கியுள்ளதுடன், இக்காலப்பகுதியில் விடுபடும் எந்தவொரு தரவும் பின்னர் ஒருபோதும் அமைப்புகளில் புதுப்பிக்கப்பட மாட்டாது என சங்கம் மிகத் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அத்துடன், பி.எச். மிகஸ்தெனியவின் தன்னிச்சையான இடமாற்ற உத்தரவை உடனடியாக இரத்து செய்து, விமான நிலைய முறைகேடுகள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகங்களின் அங்கீகரிக்கப்பட்ட உத்தியோகத்தர் ஆளணியைக் குறைக்கும் அதிகாரிகளின் இரகசிய நகர்வுகளுக்கும் சங்கத்தின் பதில் தலைவர் மற்றும் செயலாளர் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.
நாடு தழுவிய ரீதியில் சுகாதார தகவல் கட்டமைப்பு இதனால் ஸ்தம்பிக்கும் நிலையை எட்டியுள்ள போதிலும், நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தாம் தயாராகவே இருப்பதாக பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இறுதியாகத் தெரிவித்துள்ளது.


