உள்ளகப் பயிற்சியைப் பூர்த்தி செய்த வைத்தியர்களுக்குப் நியமனங்கள் வழங்கும் முறைமைக்கு எதிராக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்புப் போராட்டமானது, எவ்விதமான கலந்துரையாடல்களுக்கும் அடிப்படையற்ற ஒரு செயலாகும் எனச் சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நேற்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில், GMOA முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:
“நியாயமான காரணங்களின் அடிப்படையில் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டால், அது குறித்து எம்மால் கலந்துரையாட முடியும். ஆனால், தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ள இந்தப் போராட்டமானது எவ்வித அடிப்படையுமற்றது. இது குறித்துப் பேசுவதற்குக்கூட ஒன்றுமில்லை” என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அமைச்சருடன் உள்ள தனிப்பட்ட மோதல்களுக்காக நோயாளிகளின் உயிர்களைப் பணையம் வைக்க வேண்டாம் என அவர் கேட்டுக்கொண்டார். “என்னுடன் உங்களுக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் எனக்குச் சவால் விடுங்கள். அதை விடுத்து, நோயாளிகளின் உயிர்களைப் பணையக் கைதிகளாக ஆக்கி அவர்களை இந்தப் பிரச்சினைகளுக்குள் இழுக்க வேண்டாம். அமைச்சருடன் இருக்கும் பிரச்சினைகளைப் பொதுமக்கள் மீது திணிக்க வேண்டாம்” என அவர் வலியுறுத்தினார்.
உள்ளகப் பயிற்சி நியமனங்கள் வழங்கும் முறைமை சட்டவிரோதமானது என GMOA கருதினால், அதற்கு எதிராக நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு அமைச்சர் அவர்களுக்குச் சவால் விடுத்தார். “நீங்கள் நீதிமன்றத்திற்குச் சென்றால், ஒரு பக்கத்தில் நானும் மறுபக்கத்தில் உங்கள் குழுவினரும் இருந்து சட்ட ரீதியாக இப்பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
தன்னுடன் உள்ள முரண்பாடுகளைத் தீர்க்கச் சட்ட ரீதியான வழிகளைப் பின்பற்றுமாறு வலியுறுத்திய அமைச்சர், பொதுமக்களின் சுகாதார சேவையைப் பாதிக்கச் செய்யும் நடவடிக்கைகளைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.


