காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தம் கோரி, நேற்று கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக இலங்கை வாக்களித்துள்ளது.
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கும் இடையே கடந்த, 2023 ஆம் ஆண்டு ஒக்டோபரிலிருந்து மோதல் நடந்து வருகிறது.
இந்த போரில், காசாவில் இதுவரை, 55,000க்கும் மேற்பட்டோர் இறந்ததாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகளின், பொதுச் சபையில் ஸ்பெயின் சார்பில் போர் நிறுத்த தீர்மானம் நேற்று கொண்டு வரப்பட்டது.
தீர்மானத்தின் உள்ளடக்கங்களாக, நிரந்தர போர் நிறுத்தம், மனிதாபிமான உதவிகளுக்கான தடையை இஸ்ரேல் நீக்க வேண்டும், பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும், இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும் ஆகியவை இடம்பெற்றிருந்தன.
இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையில், 193 உறுப்பினர்களாக உள்ள 193 நாடுகளில், 149 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
12 நாடுகள் எதிராக வாக்களித்தன.
இந்தியா உட்பட, 19 நாடுகள் வாக்களிப்பைத் தவிர்த்தன.
இந்த நிலையில், தமது நாட்டின் நிலைப்பாட்டை வெளியிட்ட, ஐக்கிய நாடுகளின் இந்தியாவுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதநேனி ஹரிஷ், “இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினையில், இரு தரப்புக்கும் இடையே நேரடி அமைதி பேச்சு மீண்டும் ஆரம்பிக்கும் சூழலை உருவாக்க வேண்டும் என்பதற்காகவே, வாக்களிப்பை இந்தியா தவிர்த்தது என்று குறிப்பிட்டுள்ளார்.