பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில், அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து சேவைகள் இலவசமாக வழங்கப்படும் என்று அந்த மாகாணத்தின் முதலமைச்சர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தான் மத்திய அரசு, தலைநகர் இஸ்லாமாபாத்தில் இலவச பொதுப் போக்குவரத்து திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் மாகாணத்திலும் இதேபோன்ற சலுகையை முதலமைச்சர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது ‘X’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டதாவது:
“அரசு வழங்கியுள்ள இந்த வசதிகளை பொதுமக்கள் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஊக்குவிக்கிறேன். வசதியான, மலிவான மற்றும் நிலையான பயணத்திற்கு பொதுப் போக்குவரத்தைத் தேர்ந்தெடுங்கள்.”
முன்னதாக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, தலைநகர் இஸ்லாமாபாத்தில் பொதுப் போக்குவரத்துச் செலவுகளை மத்திய அரசே ஏற்கும் என்று அறிவித்த சில மணி நேரங்களிலேயே, முதலமைச்சர் மரியம் நவாஸிடமிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எரிபொருள் சிக்கனத்தை ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் பல்வேறு நாடுகள் இத்தகைய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா ஆகிய மாநிலங்களும், பொதுமக்கள் எரிபொருளைச் சேமிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணத்தைத் தள்ளுபடி செய்வதாக இந்த வாரத் தொடக்கத்தில் அறிவித்திருந்தன.
இந்த இலவசப் போக்குவரத்துத் திட்டம் பஞ்சாப் மாகாண மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, அதிகரித்து வரும் பணவீக்கத்திற்கு மத்தியில் இம்மாற்றமானது சாமானிய மக்களுக்குப் பெரும் நிம்மதியை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



