பாகிஸ்தானில் குண்டு வெடித்து, 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
கடந்த மார்ச் 4ம் தேதி, பாகிஸ்தானில் ராணுவ முகாமின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் ஒன்பது பேர் பலியாகினர்; 16 பேர் காயமடைந்தனர். இந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு, ‘தெஹ்ரீக் – இ – தலிபான் பாகிஸ்தான்’ என்ற பயங்கரவாதக் குழுவின் துணை அமைப்பான ‘ஜெய்ஷ் – அல் – புர்சான்’ என்ற அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் அரங்கேறி உள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஒரு சந்தையில் ஐ.இ.டி., வகை குண்டு வெடித்து, 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இந்த தாக்குதலுக்கு பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்ப்ராஸ் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பயங்கரவாதம் அனைத்தும் அழிக்கப்படும். அமைதிக்கு விரோதமாக செயல்படுவர்களின் தீய நோக்கங்கள் தோல்வி அடையும். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.