(Reuters) ஈரானில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளதைக் குறிப்பிட்டு, பாகிஸ்தான் அரசு டீசல் மற்றும் பெட்ரோல் விலையை சுமார் 20% உயர்த்தியுள்ளது.
பெட்ரோலியத் துறை அமைச்சர் அலி பர்வைஸ் மாலிக் ஒரு வீடியோ செய்தியின் மூலம், டீசல் மற்றும் பெட்ரோல் விலையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் லிட்டருக்கு 55 ரூபாய் (0.20 டாலர்) உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.
இதன்படி, ஒரு லிட்டர் டீசல் 321.17 ரூபாய்க்கும், பெட்ரோல் 335.86 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படவுள்ளது. உலகளவில் பெட்ரோலியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், வேறு வழியின்றி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விளக்கமளித்துள்ளார். இந்தத் திடீர் உயர்வு நாட்டின் பணவீக்கத்தை அதிகரிக்கச் செய்வதுடன், ஏழை மக்களைப் பெரிதும் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.
விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாவதற்கு முன்னதாகவே, லாகூர் மற்றும் கராச்சி போன்ற முக்கிய நகரங்களில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். லாகூரைச் சேர்ந்த தொழிலதிபர் இம்ரான் ஹுசைன் என்பவர், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற அச்சத்தில் சுமார் 70 நிமிடங்கள் வரிசையில் காத்திருந்து எரிபொருளை நிரப்பியதாகத் தெரிவித்தார்.
இதற்கிடையில், எரிபொருளைப் பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் எச்சரித்துள்ளார். தற்போது போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாகவும், ஆனால் மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடி எப்போது முடிவுக்கு வரும் என்று தெரியாததால், இருப்பை நீட்டிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் பெட்ரோலியத் துறை அமைச்சர் தெரிவித்தார்.
பாகிஸ்தான் தனது எரிபொருள் தேவையை முக்கியமாக சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடம் (UAE) இருந்து ஹார்முஸ் நீரிணை வழியாக இறக்குமதி செய்கிறது. இனிவரும் காலங்களில், எரிபொருள் விலைகள் வாராந்திர அடிப்படையில் மறுபரிசீலனை செய்யப்படும் என்றும் அமைச்சர் மாலிக் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


