ஆயுதப் பயிற்சி பெற்ற பின்னர் சட்டவிரோதமாக இராணுவத்தை விட்டு வெளியேறும் பல நபர்கள் பாதாள உலக குழுக்களுடன் தொடர்பு கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதாக பாதுகாப்பு செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (22) காலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அத்தகைய நபர்களைக் கைது செய்ய சிறிது காலத்திற்கு முன்பு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
ஆயுதப் பயிற்சி பெற்று இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களை மிகக் குறுகிய காலத்தில் கைது செய்யும் திறன் இராணுவத்திற்கும் பொலிஸாருக்கும் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், இந்த ஊடக சந்திப்பின் போது, சேவையில் உள்ள இராணுவ வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், பொருளாதார நெருக்கடி மற்றும் போதைப்பொருள் பழக்கம் காரணமாக இராணுவ வீரர்கள் குற்றவாளிகளுடன் தொடர்பில் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறினார்.
அதன்படி, எதிர்காலத்தில் அவர்களை அடையாளம் கண்டு கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பாதுகாப்பு செயலாளர் மேலும் தெரிவித்தார்.