இலங்கை பாராளுமன்றத்தின் அத்தனை பரபரப்புகளுக்கும் மத்தியில், கோட்டே ஆனந்த சாஸ்த்ராலயா விளையாட்டு மைதானம் திடீரென ஒரு சர்வதேச கிரிக்கெட் அரங்கம் போல அதிரத் தொடங்கியது. பாராளுமன்ற பணியாளர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் வருடாந்தம் நடத்தப்படும் ‘பார்ளிமென்ட் ப்ரீமியர் லீக் 2026’ (PPL) மென்பந்து கிரிக்கெட் தொடர், இம்முறை ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் உச்சகட்ட விறுவிறுப்புடன் நிறைவுக்கு வந்துள்ளது.
மைதானத்தில் தூசி பறக்க நடைபெற்ற இந்த அசாத்தியமான கிரிக்கெட் போரில், ஆண்களுக்கான பிரிவில் கயான் பெரேரா தலைமையிலான ‘றோயல் றிசீவர்ஸ்’ அணி தங்களின் அதிரடி ஆட்டத்தால் எதிரணிகளை வீழ்த்தி, மகுடத்தை தன்வசப்படுத்தியது. அதேநேரம், களத்தில் தங்களுக்கு ஈடுஇணையே இல்லை என்பதை நிருபிக்கும் வகையில், பெண்கள் பிரிவில் கீதானி விதானபத்திரண தலைமையிலான ‘கோல்டன் ஃப்ளேம்ஸ்’ அணி தொடர்ந்து 3வது தடவையாகவும் சம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கி வரலாற்று சாதனை படைத்தது!
இறுதிப் போட்டியின் கடைசி ஓவர் வரை வெற்றிக்காக போராடிய பிரதீப் ரணதுங்க தலைமையிலான ‘தியவன்னா ரைடர்ஸ்’ அணி ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், மினோலி மதுஷிலா தலைமையிலான ‘ஒன் டு ஒன் கேர்ள்ஸ்’ அணி பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பிடித்து ரசிகர்களின் கைதட்டல்களைப் பெற்றன. போட்டிகள் அனைத்திலும் ஒவ்வொரு பந்தும், ஒவ்வொரு விக்கெட்டும் அரங்கத்தையே அதிரவைக்கும் வகையில் மிகவும் சுவாரஸ்யமாக அமைந்திருந்தன.
இந்த பிரம்மாண்டமான தொடரின் நிறைவு விழா மற்றும் வெற்றி பெற்ற சாம்பியன்களுக்கான கிண்ணம் வழங்கும் நிகழ்வு, கௌரவ சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன, கௌரவ பிரதி குழுக்களின் தவிசாளர் ஹேமாலி வீரசேகர மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. இதில் பாராளுமன்ற உறுப்பினர்கள், படைக்கலச் சேவிதர் குஷான் ஜயரத்ன, சணச நிறுவனத் தலைவர் கலாநிதி பி.ஏ. கிறிவந்தெனிய உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு வீரர்களை உற்சாகப்படுத்தினர்.
இத்தொடரில் தனிநபர் திறமையால் மைதானத்தை தங்களின் வசமாக்கிய நாயகர்களும் உருவெடுத்தனர்! ‘றோயல் றிசீவர்ஸ்’ அணியின் சுரங்க விக்ரமஆரச்சி இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாகவும், பவந்த ஷாமிக் தொடரின் சிறந்த பந்துவீச்சாளராகவும், ஜனித் ஆரியதிலக போட்டித் தொடரின் நாயகனாகவும் விருதை தட்டிச்சென்றனர். தியவன்னா ரைடர்ஸ் அணியின் ஏ.ஜி. சுரேஷ் சதுரங்க குமாரஜீவ சிறந்த துடுப்பாட்ட வீரராக ஜொலித்தார். எல்லாவற்றிற்கும் மேலாக, PPL வரலாற்றிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட தொடரின் ‘சிறந்த வீராங்கனை’ என்ற வரலாற்றுப் பெருமைமிக்க விருதை ‘கோல்டன் ஃப்ளேம்ஸ்’ அணியின் ருவங்கா கமகே தனது வசம் ஈர்த்துக் கொண்டார்!



