மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தனது சொத்தில் 99 சதவீதத்தை 2045 ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் கேட்ஸ் அறக்கட்டளை 2045 ஆம் ஆண்டுக்குள் தனது செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ், தனது சொத்தில் பெரும்பகுதியை, குறிப்பாக ஆப்பிரிக்காவில் சுகாதாரம் மற்றும் கல்வி சேவைகளை மேம்படுத்துவதற்காக அடுத்த 20 ஆண்டுகளில் நன்கொடையாக வழங்க திட்டமிட்டுள்ளார்.
ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி, உலகின் ஐந்தாவது பெரிய பணக்காரரான பில் கேட்ஸின் தற்போதைய சொத்து மதிப்பு சுமார் 175 பில்லியன் டாலர்கள். இது 2045 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 200 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே ஆண்டில் தான் அவரது அறக்கட்டளை தனது செயல்பாடுகளை நிறுத்த திட்டமிட்டுள்ளது.
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் உள்ள ஆப்பிரிக்க யூனியன் தலைமையகத்தில் பேசிய 69 வயதான பில் கேட்ஸ், “என்னுடைய சொத்துக்களை அடுத்த 20 ஆண்டுகளில் நன்கொடையாக வழங்க முடிவு செய்துள்ளேன். இதில் பெரும்பகுதி ஆப்பிரிக்காவில் உள்ள சவால்களை எதிர்கொள்ள உதவும் வகையில் செலவிடப்படும்” என்று தெரிவித்தார். கேட்ஸ் அறக்கட்டளை மூன்று முக்கிய இலக்குகளை கொண்டுள்ளது. அவை, தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் தவிர்க்கக்கூடிய இறப்புகளை முடிவுக்குக் கொண்டுவருவது, தொற்று நோய்களால் பாதிக்கப்படாமல் அடுத்த தலைமுறையை வளர்ப்பது மற்றும் மில்லியன் கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்பது ஆகியவையாகும்.
