காலியில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ‘காலு குமாரி’ அதிவேக புகையிரதத்துடன் கெப் (Cab) ரக வாகனம் ஒன்று மோதி இன்று (22) காலை 7.30 மணியளவில் பாரிய விபத்தொன்று சம்பவித்துள்ளது.
இந்த விபத்தில் கெப் வண்டியின் சாரதி உட்பட மூவர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படுகாயமடைந்த சாரதி உடனடியாக களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்துக்குள்ளான வாகனம் அருகிலுள்ள கட்டுமானத் திட்டமொன்றில் பணிபுரியும் ஒருவருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளது. ரயிலில் மோதிய வண்டி சுமார் 50 மீற்றர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் பலத்த சேதமடைந்துள்ளது.
விபத்து நிகழ்ந்த பகுதியில் உள்ள ரயில் கடவையில் முறையான பாதுகாப்பு கேட் (Gate) வசதி இல்லாமையே இந்த அனர்த்தத்திற்கு முக்கிய காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவம் குறித்து பயாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்


