புத்தளத்தில் கோலாகலமாக நடைபெற்ற இலங்கையின் 78-வது சுதந்திர தின விழா: “இலங்கையை கட்டியெழுப்புவோம்” எனும் மகுடத்தில் சிறப்பான கொண்டாட்டம்
இலங்கை திருநாட்டின் 78-வது சுதந்திர தின விழா, “இலங்கையை கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் புத்தளம் கொழும்பு முகத்திடலில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டது.
புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கயான் ஜானக அவர்களின் தலைமையில் இவ்விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
விழாவிற்கு வருகை தந்த கயான் ஜானக உள்ளிட்ட அதிதிகளை, புத்தளம் புனித ஆண்ட்ரூ கல்லூரியின் (St. Andrew’s College) மாணவர் படைப் பிரிவினரும், ஆனந்தா கல்லூரியின் பேண்ட் வாத்தியக் குழுவினரும் அணிவகுப்புடன் கௌரவமாக வரவேற்றனர்.
புனித ஆண்ட்ரூ கல்லூரி மாணவர்களின் தேசிய கீதத்துடனும், ஆனந்தா கல்லூரி மாணவர்களின் ஆசீர்வாதப் பாடல்களுடனும் விழா இனிதே ஆரம்பமானது.
விழாவை மேலும் மெருகூட்டும் வகையில் பல்வேறு கலாசார மற்றும் கலை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டன:
கருவலகஸ்வெவ கலாசார மத்திய நிலையத்தின் பூஜா நடனம், இந்து கல்லூரி மாணவிகள் வழங்கிய பரதநாட்டிய கலைநிகழ்ச்சி, புத்தளம் மற்றும் பல்லம கலாசார மத்திய நிலையங்களின் புதுமையான நவீன நடனங்கள், ஆனமடுவ கலாசார மத்திய நிலையத்தின் பாரம்பரிய ‘வெஸ்’ (Wes) நடனம் நிகழ்வை மேலும் மெருகூட்டின.
புத்தளம் மாவட்டச் செயலாளர் திரு. இந்திக்க மஞ்சுள சில்வா அவர்களின் வரவேற்புரையை தொடர்ந்து, இந்த நன்நாளில், நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசல் தமிழ் மொழியில் தனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
சிங்கள மொழியில் நாடாளுமன்ற உறுப்பினர் கயான் ஜானக தனது வாழ்த்துச் செய்தியைப் பகிர்ந்து கொண்டார்.
இந்நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்கள், புத்தளம் மாவட்டச் செயலாளர் இந்திக சில்வா, மேலதிக மாவட்டச் செயலாளர்களான புபுதிகா எஸ். பண்டார (நிர்வாகம்) மற்றும் சதுரிகா ஜயசிங்க (காணி) ஆகியோர் கலந்து கொண்டனர்.
இவர்களுடன் முப்படைகளின் பிரதிநிதிகள், பொலிஸார், சிவில் பாதுகாப்புப் படையினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.



















