ஜூட் சமந்த
புத்தளம் – அனுராதபுரம் வீதியின் 9ஆம் மைல் கல் பகுதியில் அமைந்துள்ள பாலம் மீண்டும் சேதமடைந்துள்ளதால், அவ்வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நிலவிய ‘டித்வா’ (Ditwa) சூறாவளியின் போது இந்தப் பாலம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இடிந்து விழுந்தது. அதனைத் தொடர்ந்து, போக்குவரத்துப் பாதிப்புகளைக் குறைக்கும் வகையில் அதிகாரிகளால் தற்காலிகப் பாலமொன்று அமைக்கப்பட்டு, சில நாட்களிலேயே போக்குவரத்துச் சீர்செய்யப்பட்டது.
கடந்த 9ஆம் திகதி, கருவலகஸ்வெவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேற்கொண்ட ஆய்வின் போது, தற்காலிகமாக அமைக்கப்பட்ட இந்தப் பாலம் மூன்று இடங்களில் வெடிப்புக்குள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டது. இந்த விடயம் தொடர்பாக புத்தளம் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்கு பொலிஸாரால் உடனடியாக அறிவிக்கப்பட்டது.
பாலத்தின் அபாயகரமான நிலையைக் கருத்திற்கொண்டு, கடந்த 9ஆம் திகதி மாலை முதல் இலகுரக வாகனங்கள் மாத்திரம் பாலத்தின் ஊடாகச் செல்ல வீதி அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.
அதேவேளை, கனரக வாகனங்கள் இந்தப் பாலத்தைப் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதுடன், அவை தமது பயணங்களுக்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



