தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கும் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியில் திடீரெனப் பேருந்துகள் இயங்காமல் முடங்கியதால், காலையிலேயே பயணிகள் வீதிகளில் அலைக்கழிக்கப்பட்டு பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நீண்ட தூரச் சேவை பஸ்களின் ஊழியர்களால், தமக்கு வீதி நடுவே தொடர்ச்சியாகக் கொடூரமான முறையில் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும், இதற்கெதிராக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டியே இப்போராட்டம் வெடித்துள்ளது.
இன்று (27) அதிகாலை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் சாதாரண பஸ்கள் மட்டுமன்றி, ஆடம்பர (Luxury/Super Luxury) பஸ் ஊழியர்களும் முழுமையாகப் பங்கேற்றுள்ளதால் போக்குவரத்துச் சேவை முற்றாக முடங்கியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே சிலாபம், ஆரச்சிக்கட்டுவ மற்றும் பத்துளுஓய ஆகிய பகுதிகளில் வைத்துத் தம்மை வழிமறித்துத் தாக்குதல் நடத்தியதாகப் பாதிக்கப்பட்ட பஸ் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். “கடந்த 20-ஆம் திகதி சிலாபம் நீதிமன்றம் மற்றும் வைத்தியசாலைக்கு அருகே வைத்து எம்மை அடித்தார்கள். மீண்டும் 24, 25-ஆம் திகதிகளிலும் தாக்குதல் தொடர்ந்தது. நிலைமை மோசமடையவே 26-ஆம் திகதி பொலிஸ் பாதுகாப்புடன் தான் பயணம் செய்தோம். ஆனால், முந்தல் பொலிஸ் எல்லைக்குட்பட்ட பத்துளுஓயவில் வைத்து மீண்டும் அடித்தார்கள்!” எனப் பாதிக்கப்பட்ட ஊழியர் ஒருவர் அதிர்ச்சியோடு தெரிவித்தார்.
இந்தத் தாக்குதல்களில் காயமடைந்த பஸ் ஊழியர்கள் பலர் தற்போதும் புத்தளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். “நீண்ட தூர பஸ்களின் உரிமையாளர்கள் அதனை வேறு நபர்களுக்குக் வாடகைக்குக் கொடுத்துள்ளனர். அப்படி வாடகைக்கு எடுத்தவர்களில் பெரும்பாலானோர் சிலாபம் மற்றும் ஆரச்சிக்கட்டுவ பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பஸ்களில் ஓட்டுநர், நடத்துனரைத் தவிர இரும்புத் தடிகளுடன் வேறு சில ஆட்களையும் வைத்திருக்கிறார்கள். நாம் அந்தப் பகுதிகளைக் கடக்கும்போது எம்மைத் தாக்குகிறார்கள்” எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.
பொலிஸார், மேல்மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆகியவற்றிற்குப் பலமுறை முறைப்பாடு செய்தும் எவ்வித தீர்வும் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள ஊழியர்கள், தமக்கு முறையான நீதி கிடைக்கும் வரை இந்த வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்றும், அடுத்தடுத்த நாட்களில் ஏனைய வீதிகளில் பயணிக்கும் பஸ் ஊழியர்களும் இதனுடன் இணையவுள்ளதாகவும் எச்சரித்துள்ளனர்.
இச்சம்பவங்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாத நிலையில், சிலாபம், ஆரச்சிக்கட்டுவ மற்றும் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜுட் சமந்த





