புத்தளம் – சிலாபம் வீதியில் அதிசொகுசு ஜீப்பில் கஞ்சா வேட்டை!

118 views

ஜுட் சமந்த

புத்தளம் – சிலாபம் பிரதான வீதியில் நள்ளிரவில் சீறிப்பாய்ந்து வந்த அந்த அதிசொகுசு ஜீப் வண்டியைப் பார்த்தபோது, அதற்குள் இவ்வளவு பெரிய சட்டவிரோத ரகசியம் ஒளிந்திருக்கும் என்று பொலிஸார் கூட ஆரம்பத்தில் ஊகிக்கவில்லை. வழக்கமான வீதித் தடை சோதனையின் போது நடந்த அந்த ஒரு கணப்பொழுதுச் சோதனை, மிகப்பெரிய கஞ்சா கடத்தல் கும்பலின் சதியை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளது.

ஆகஸ்ட் 09ஆம் திகதி இரவோடு இரவாக பத்துப்ளுஓய பொலிஸ் வீதித் தடையில் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த பொலிஸ் கொன்ஸ்டபிள்களான கோனார (73916) மற்றும் மேதிஸ் (78293) ஆகியோர் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த சொகுசு ஜீப்பை மறித்துச் பரிசோதித்தபோது, பொலிஸாரே அதிர்ந்துபோயினர். அந்த வாகனத்தினுள் மிகவும் நுட்பமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 கிலோகிராமும் 985 மில்லிகிராமும் கொண்ட பெருந்தொகை கஞ்சா மீட்கப்பட்டது.

வாகனத்தை ஓட்டிவந்த 24 வயதுடைய இளைஞனும், அவருடன் பயணித்த 23 வயதுடைய இளம் பெண்ணும் தம்பதிகள் என்பது விசாரணையில் தெரியவந்தது. மொணராகலை – ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த கணவனும், இராஜாங்கனை பகுதியைச் சேர்ந்த மனைவியும் திருமணத்திற்குப் பிறகு இருவரது வீடுகளிலும் மாறி மாறி வசித்து வந்தவாறே இந்த சட்டவிரோத கஞ்சா வியாபாரத்தை ஜோடியாக முன்னெடுத்து வந்துள்ளனர்.

ஆனால், உண்மையான திருப்பம் கஞ்சா பிடிபட்டதற்குப் பிறகுதான் நடந்தது! கைதிலிருந்து எப்படியாவது தப்பித்துவிட வேண்டும் என்று திட்டமிட்ட அந்த இளம் ஜோடி, சோதனையிட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு உடனடியாக 1 லட்சம் ரூபாயை லஞ்சமாகக் கொடுக்க முன்வந்தது. பொலிஸார் அதற்கு அசையாததால், நொடிப் பொழுதில் லஞ்சத் தொகையை 5 லட்சம் ரூபாய் (ரூ. 500,000) ஆக உயர்த்தினர். “பணத்தை பெற்றுக்கொண்டு எங்களை விட்டுவிடுங்கள்” எனக் கெஞ்சியுள்ளனர்.

ஆனாலும், அந்த இளம் ஜோடியின் பல லட்சம் ரூபாய் ஆசை வார்த்தைகளுக்கு ஆளாகாத ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் அதிகாரிகள், நேர்மையுடன் செயற்பட்டு லஞ்சத்தை முற்றாக நிராகரித்தனர். உடனடியாக கணவன், மனைவி இருவரையும் கைது செய்ததோடு, கைப்பற்றப்பட்ட 17 கிலோவிற்கும் அதிகமான கஞ்சா மற்றும் அதிசொகுசு ஜீப் வண்டியையும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக முந்தல் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.