புத்தளம் மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை ஆளும் கட்சியான தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
இதன் பிரகாரம் புத்தளம் மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் முதலாம் வட்டார வேட்பாளரான முஹம்மது பாரூக் ரின்சாத் அஹ்மத் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் மாநகர சபையின் முதலாவது பிரதி மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் ஏழாம் வட்டார வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற நுஸ்கி நிசார் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் வாழ் பொதுமக்கள் அனைவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட புத்தளம் மாநகர சபைக்கான முதலாவது கன்னி அமர்வு மாநகர சபையின் பொது நூலகத்தில் அமையப்பெற்றுள்ள மாநகர சபையின் சபா மண்டபத்தில், இன்று (16) இடம்பெற்றது.
சபைக்கு தெரிவாகியுள்ள தேசிய மக்கள் சக்தியின் 07 உறுப்பினர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் 04 உறுப்பினர்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 03 உறுப்பினர்கள், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் 03 உறுப்பினர்கள், ஐ.தே.கட்சியின் 01 உறுப்பினர் மற்றும் பந்து சின்னம் சுயேட்சை குழுவின் 01 உறுப்பினர் என மொத்தமாக 19 உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகி இருந்தனர்.
பிரதி மேயருக்கு விஜித பிரசன்ன மற்றும் நுஸ்கி நிசார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்டன. இதனையடுத்து நடைபெற்ற பகிரங்க வாக்களிப்பில் நுஸ்கி நிசார் 10 வாக்குகளையும், விஜித பிரசன்ன 6 வாக்குகளையும் பெற்றுக் கொண்டதுடன் நுஸ்கி நிசார் வெற்றி பெற்று பிரதி மேயராக தெரிவானார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சியின் 03 உறுப்பினர்களும் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.