(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
புத்தளம், வண்ணாத்திவில்லு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மயிலங்குளம் நகரத்திற்கான புதிய பயணிகள் பஸ் சேவையை புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் புத்தாண்டு பிறப்புடன் நேற்று வியாழக்கிழமை (01) ஆரம்பித்து வைத்தார்.
மயிலங்குளத்தில் இருந்து புத்தளம் நகர் வரையான பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டதன் ஊடாக இப்பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்து வந்த இந்த பயணிகள் போக்குவரத்து பஸ் சேவையின் தேவைப்பாடு நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதற்காக புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் அவர்களுக்கு தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதாக பிரதேச மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
மேற்படி நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இந்த பஸ் சேவையை ஆரம்பித்து வைத்ததோடு, தேசிய மக்கள் சக்தியின் உள்ளூர் பிரமுகர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



