பட்டலந்த விவகாரம் போன்று எத்தனை ஆயிரமாயிரம் சம்பவங்கள் எமது மண்ணிலே நடந்திருக்கிறது. இந்தச் சம்பவங்கள் உங்களுக்கு தெரியவில்லையா? இதற்கு என்ன நடவடிக்கையை நீங்கள் எடுக்கப் போகிறீர்கள்? என தமிழரசுக் கட்சியின் பதில் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நல்லூரடியில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று (13) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..
“பட்டலந்த விவகாரம் போன்று எத்தனையோ ஆயிரமாயிரம் சம்பவங்கள் நம் மண்ணில் நடந்துள்ளன. இந்தச் சம்பவங்கள் உங்களுக்கு தெரியாதவையா? இவற்றுக்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? இப்போது பலரும் பேசி வரும் பட்டலந்த விவகாரம், அந்தக் காலத்திலேயே பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இளமைக் காலத்தில், இதற்கு அவருக்கும் தொடர்பு இருந்ததாகவே பேசப்பட்டு வந்தது. அந்த ஆணைக்குழு அறிக்கையும் இது போன்ற விடயங்களை உள்ளடக்கியதாகவும், அதனை உறுதிப்படுத்தியதாகவும் உள்ளது.
அவர்களைப் பொறுத்தவரை இது காலம் கடந்த விடயமாக இருந்தாலும், அதனை பகிரங்கப்படுத்தி உண்மையை வெளிக்கொண்டுவந்து, அரசாங்கம் அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பது சரியென்றே நான் கருதுகிறேன். உண்மையைச் சொல்லப்போனால், பட்டலந்த படுகொலை விவகாரம் என்பது இந்த நாட்டு மக்களுக்காக அங்கு நடைபெறும் ஒரு விடயம்.
ஆனால், ஆட்சியில் இருக்கும் எந்த அரசாங்கமும் தமிழர்களுக்கு எதைச் செய்தாலும் அதனை நியாயப்படுத்துவதையே மாறி மாறி ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் செய்து வந்துள்ளன. இதுவே அவர்களது கொள்கையாகவும், நிலைப்பாடாகவும் இருக்கிறது. ஏனெனில், காட்சிகள் மாறினாலும் ஆட்கள் மாறவில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது சிந்தனையில் மாற்றம் ஏற்படுவதில்லை.
பட்டலந்த விவகாரம் தொடர்பாக ஆட்சியாளர்களிடம் நாங்கள் எந்தக் கோரிக்கையையும் வைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களே அதுகுறித்து சண்டையிட்டுக் கொள்வார்கள். அப்படித்தான் இப்போது நடக்கிறது. இதுபற்றி சிங்கள அரசியல்வாதிகள் பேசிக்கொள்ளட்டும். ஒரு பட்டலந்த பற்றி அவர்கள் இப்போது அங்கு பேசுகிறார்கள். ஆனால், இங்கு எத்தனையோ ஆயிரம் பட்டலந்த கொடுமைகள் நிகழ்ந்துள்ளன. எவ்வளவு பேர் கொடுமைப்படுத்தப்பட்டு, காயப்படுத்தப்பட்டு, கொல்லப்பட்டிருக்கிறார்கள்? அவை அனைத்திற்கும் விசாரணை நடக்கப் போகிறதா என்றால், இல்லை.
ஆகவே, பட்டலந்த போன்ற பற்பல சம்பவங்கள் எங்களுக்கு எதிராக நடந்துள்ளதற்கு, நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்? ஏன் உங்களால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை? என்று பல்வேறு கேள்விகளை நாங்கள் எழுப்பலாம். அதைச் செய்வோம்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.