பேராதனைப் பல்கலைக்கழக நியமனத்தில் பகீர் முறைகேடு!

64 views

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கைகள் துறையில் இடம்பெற்ற சிரேஷ்ட விரிவுரையாளர் நியமன நடைமுறைகளில் பாரிய முறைகேடுகள், சட்டவிரோத செயற்பாடுகள் மற்றும் பக்கச்சார்பு நிலவியுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம், தகுதியான விண்ணப்பதாரிக்கு அப்பதவியை உடனடியாக வழங்குமாறு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

களனி பல்கலைக்கழகத்தின் பாளி மற்றும் பௌத்த கற்கைகள் பட்டப்பின்படிப்பு நிறுவகத்தில் சிரேஷ்ட விரிவுரையாளராக (நிலை II) கடமையாற்றும் கலாநிதி இரோமி நிசங்சலா மாணிக்கே ஆரியரத்ன என்பவரால் இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் தெரிவு நடைமுறையை எதிர்த்துத் தொடரப்பட்ட இந்த வழக்கை நீதிபதிகளான ஆர். குருசிங்க மற்றும் கலாநிதி சுமுது பிரேமச்சந்திர ஆகியோர் அடங்கிய இருவர் கொண்ட அமர்வு தீவிரமாக விசாரித்தது.

விசாரணையின் போது, சிரேஷ்ட விரிவுரையாளர் நிலை I பதவிக்கு தெரிவுசெய்யப்பட்ட ஒரேயொரு தகுதியான விண்ணப்பதாரி கலாநிதி ஆரியரத்ன மட்டுமே என்பது வெளிச்சத்திற்கு வந்தது. பௌத்த கற்கைகளில் முதலாம் வகுப்பு சிறப்புப் பட்டம், முதுகலைத் தகுதி மற்றும் 12 ஆண்டுகளுக்கும் மேலான உயர் கல்விசார் அனுபவத்தைக் கொண்டிருந்த போதிலும், அவருக்கு நியமனம் மறுக்கப்பட்டிருந்தது நீதிமன்றத்தை வியப்பில் ஆழ்த்தியது.

தெரிவு நடைமுறைகளை முழுமையாக ஆராய்ந்த நீதிமன்ற அமர்வு, முழு விவகாரமும் நடைமுறை அநீதி, பக்கச்சார்பு மற்றும் தீய நோக்கங்களால் கறைபடிந்துள்ளதால் இதில் நீதித்துறை தலையிடுவது தவிர்க்க முடியாதது எனத் தீர்ப்பளித்தது. இதனடிப்படையில், கலாநிதி ஆரியரத்னவுக்கு சிரேஷ்ட விரிவுரையாளர் (நிலை I) பதவியை வழங்காத தீர்மானத்தை ‘செர்டியோராரி’ (Certiorari) மற்றும் ‘மண்டமஸ்’ (Mandamus) பேராணைகள் மூலம் நீதிமன்றம் இரத்து செய்தது.

அத்துடன், அவர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்த 2022 செப்டம்பர் 22 ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த சிரேஷ்ட விரிவுரையாளர் நிலை I பதவியை அவருக்கு வழங்குமாறு பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு நீதிமன்றம் கட்டளையிட்டது.

அதேவேளை, முறைகேடான தெரிவின் அடிப்படையில் 33ஆம் பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட சிரேஷ்ட விரிவுரையாளர் நிலை II நியமனத்தை முற்றாக ரத்து செய்த நீதிமன்றம், 32ஆம் பிரதிவாதியான வணக்கத்திற்குரிய கலாநிதி திவுலபெல்லெஸ்ஸே விமலானந்த தேரரின் நியமனத்தை ஏற்றுக்கொண்டு, அதனையும் 2022 செப்டம்பர் 22 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் முன்தேதியிட்டு வழங்குமாறு பணித்தது.

மனுதாரர் கலாநிதி ஆரியரத்ன சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவுடன் சட்டத்தரணி ரன்மலீ மீபாகல முன்னிலையாகியிருந்தார்.