பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அதே நிலையத்தில் பணியாற்றும் மற்றொரு உத்தியோகத்தரால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நேற்று (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக திக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கடந்த (06) இரவு கடும் மதுபோதையில் பொலிஸ் நிலையத்திற்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தில் நித்திரை செய்துகொண்டிருந்தபோது, மற்றைய உத்தியோகத்தர் கூர்மையான ஆயுதத்தால் அவரது வயிற்றுப் பகுதியில் குத்தி படுகாயத்தை ஏற்படுத்தியுள்ளார் என ஹட்டன் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் வீரசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து பிரதேச மக்கள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். பொகவந்தலாவ பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) உள்ளிட்ட சில அதிகாரிகள் மாணிக்கக்கல் கடத்தல்காரர்களுடன் நேரடித் தொடர்பு வைத்துள்ளதாகவும், அவர்கள் இரவு நேரங்களில் அதிகளவில் மது அருந்துவதாகவும் பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பொலிஸ் பொலிஸ் நிலையத்திற்குள்ளேயே சக உத்தியோகத்தர் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம், பொலிஸ் துறையினரின் ஒழுக்கம் மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


