இன்று (2025.05.16) ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இரண்டு முக்கிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து நியாயமற்ற முறையில் உடனடி வேலைநிறுத்தத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பதவி தர உயர்வுகளை வழங்குவதில் தாமதம், மற்றும் புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை செயல்படுத்தாமை ஆகிய இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து நியாயமற்ற முறையில் உடனடி வேலைநிறுத்தத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக குறித்த அமைச்சு அறிக்கை ஒன்றின்மூலம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு என்றவகையில் இந்த ஆண்டின் ஆரம்பத்தில் (2025.01.22) ரயில்வே துறையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றின் மூலம் 909 வெற்றிடங்களுக்கான அமைச்சரவை ஒப்புதலையும் வழங்கியுள்ளதாகவும், இதில் 106 நிலைய அதிபர்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் பல மாதங்களுக்கு முன்னரே இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தாலும், அவற்றை செயல்படுத்துவதில் உள்ள தாமதம் மற்றும் சிக்கலான சூழ்நிலைகள் குறித்து அமைச்சு, அமைச்சர்கள் மட்டத்தில் தலையிட்டு கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்த போதிலும் திணைக்களத்தின் சில உப திணைக்களங்களுக்கு இடையே காணப்படும் திறனற்ற தன்மை காரணமாக இதுவரையிலும் எந்தவொரு புதிய ஆட்சேர்ப்புகளையும் செய்யத் முடியாமல் போயுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகள் அமைச்சு மட்டத்தில் தீர்க்கப்பட்டிருந்த போதிலும் அவற்றை செயல்படுத்தாமையின் பின்னணியில் பிரச்சினைகளை கலந்துரையாடித் தீர்த்துக்கொள்வதற்குப் பதிலாக பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் உடனடி தொழிற்சங்க நடவடிக்கைகளை செயல்படுத்துவது குறித்து அமைச்சு என்ற வகையில் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
புகையிரத திணைக்களத்தின் சில உப திணைக்களங்களின் செயல்திறன் குறைவாக இருந்த போதிலும் அமைச்சு என்ற வகையில் அனைத்திலும் தலையீட்டை மேற்கொண்டு தீர்வுகாண முயற்சித்து வரும் போதிலும், பொதுமக்களுக்கு அநியாயமாக தீங்கு விளைவிக்கும் வேலைநிறுத்தங்களைத் தொடங்குவதற்குப் பின்னால் வேறு ஏதேனும் நோக்கம் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாகவும், இந்த வேலைநிறுத்தமானது தெளிவாக அரசாங்கத்தை சிரமத்திற்கு உட்படுத்தவும் பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கவும் மட்டுமே மேற்கொள்ளப்படும் ஓர் முயற்சியாகத் தெரிகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
