போதைப்பொருளை வாங்குவதற்காக சித்தியின் நகைகளை திருடிய குற்றச்சாட்டில் 21 வயது இளைஞன் உட்பட திருட்டுக்கு உடந்தையாக செயற்பட்ட 3 இளைஞர்கள் நேற்று வெள்ளிக்கிழமை (07) கைது செய்யப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,
திருநெல்வேலி பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த 03 ஆம் திகதி தங்க நகை திருடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில், முறைப்பாட்டாளரின் வீட்டில் வசித்து வந்த, முறைப்பாட்டாளரின் அக்காவின் மகனே திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.
மேலும் சந்தேகநபரிடமிருந்து, திருடப்பட்ட நகையில் ஒரு தொகுதியும், ஒரு தொகை பணம் மற்றும் 2 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் அடிப்படையில் திருட்டுக்கு உடந்தையாக செயற்ப்பட்ட குற்றச்சாட்டில் மேலும் மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருட்டில் ஈடுபட்டவர்கள், போதைக்கு அடிமையானவர்கள் எனவும், போதைப்பொருட்களை கொள்வனவு செய்யவே திருட்டில் ஈடுபட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
