தொழில் அதிபர் எலான் மஸ்கின் வருத்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டதாகவும், அவர் நன்றி தெரிவிப்பதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நெருங்கிய நண்பராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். அரசின் செயல்திறன் மேம்பாட்டு துறையின் தலைவராகவும் இருந்தார். சமீபத்தில் அந்த பதவியில் இருந்து விலகினார். அதன் பின் டிரம்ப் அரசு புதிய செலவு மசோதாவை அறிமுகப்படுத்தியது. இந்த மசோதாவை எதிர்க்கட்சியை காட்டிலும் எலான் மஸ்க் கடுமையாக விமர்சித்தார். அருவருப்பானது என்றார்.
இதனால் கோபமடைந்த டிரம்ப், எலான் மஸ்க் நிறுவனத்துக்கு செல்லும் மானியங்களை நிறுத்த போவதாக மிரட்டல் விடுத்தார். இந்நிலையில், டிரம்ப் குறித்த தன் சமூக வலைதள பதிவுகளுக்கு எலான் மஸ்க் நேற்று வருத்தம் தெரிவித்தார். அதில் தான் எல்லை மீறிவிட்டதாகவும் கூறியிருந்தார். இது குறித்து அதிபர் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில், அவரை எதற்கும் குறை கூறவில்லை. நான் சற்று ஏமாற்றமடைந்தேன், என்றார்.
இந்நிலையில், டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் வருத்தத்தை டிரம்ப் ஏற்றுக்கொண்டார். இது குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் கூறியதாவது: தொழில் அதிபர் எலான் மஸ்கின் அறிக்கையை அதிபர் டிரம்ப் ஏற்றுக்கொண்டார், அதைப் பாராட்டுகிறார். அவருக்கு நன்றி தெரிவித்தார். அமெரிக்க மக்களின் வணிகத்தில் நாங்கள் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
கடந்த வாரம் மாறி, மாறி விமர்சனம் செய்து சண்டை போட்டு கொண்ட டிரம்ப், மஸ்க் ஆகிய இருவரும் இந்த வாரம் நண்பராக மாறி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.