- அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், $300 பில்லியன் டாலர் பெறுமதியான பிரத்தியேக முதலீட்டு நிதியமொன்று உருவாக்கப்படவுள்ளது.
- இது அரசாங்க நிதியுதவியோ அல்லது போர்க்கால இழப்பீடோ அல்ல; முற்றிலும் தனியார் துறையினரின் முதலீட்டுத் திட்டமாகும்.
- எதிர்வரும் வெள்ளிக்கிழமை இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உடன்படிக்கை கையெழுத்தாகவுள்ள நிலையில், அடுத்த 60 நாட்களுக்குள் திட்டவரைவுகள் இறுதி செய்யப்படவுள்ளன.
துபாய் செய்தியகம்: உலகப் பொருளாதாரத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கா – ஈரான் இடையிலான போருக்கு முற்றுப்புள்ளி வைக்க, திரைக்குப் பின்னால் ஒரு பிரம்மாண்டமான ‘பில்லியன் டாலர்’ டீல் பேசப்பட்டு வரும் அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் மிரட்டலான மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய $300 பில்லியன் டாலர் (சுமார் 300,000 மில்லியன் டாலர்) பெறுமதியான பிரத்தியேக முதலீட்டு நிதியம் ஒன்று, இரு நாடுகளுக்கும் இடையிலான சமாதான உடன்படிக்கையின் பிரதான புள்ளியாக உருவெடுத்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஆகக்கூடிய சுவாரஷ்யம் என்னவென்றால், இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத இந்த நிதியத்திற்கான தொகையில், பாதியளவுக்கும் அதிகமான நிதி உலகெங்கிலுமுள்ள பெரும் தனியார் நிறுவனங்களால் ஏற்கனவே புக் செய்யப்பட்டுள்ளது! இந்த இரகசிய திட்டத்தின் முழு விபரங்களையும் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ் (Reuters) முதன்முதலாக உலகிற்கு வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் ஈரான் மீது தொடுத்த பாரிய தாக்குதலுடன் ஆரம்பித்த இந்த யுத்தம், உலகளாவிய எண்ணெய் விநியோக மார்க்கமான ‘ஹோர்முஸ் நீரிணை’ மூடப்படுவதற்கு வழிவகுத்தது. இதனால் உலக நாடுகள் எங்கும் எரிபொருள் விலை உச்சம் தொட்டது. இந்நிலையில், இந்த இராணுவ முற்றுகைகளை நீக்கி, போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாட்டு அதிகாரிகளும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு முக்கிய இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளனர். இந்த இணக்கப்பாட்டைத் தொடர்ந்து, எதிர்வரும் வெள்ளிக்கிழமை அமெரிக்காவும் ஈரானும் உத்தியோகபூர்வமாக இந்த வரலாற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திடத் தயாராகி வருகின்றன.
ஆனால், வழமையான போர்க்கால உடன்படிக்கைகள் போல ஈரான் கேட்ட $400 பில்லியன் டாலர் போர்க்கால இழப்பீட்டை வழங்க அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்துவிட்டது. அதற்குப் பதிலாகவே, புத்திசாலித்தனமாக இந்த “மறுசீரமைப்பு மற்றும் அபிவிருத்தி நிதியம்” (Reconstruction and Development Fund) என்ற ஐடியா முன்வைக்கப்பட்டது. பிரான்சில் நடக்கும் G7 மாநாட்டின் இடையே இது குறித்துப் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “நாங்கள் ஈரானில் ஒரு சதம் கூட முதலீடு செய்யவில்லை, அரபு நாடுகளையும் முதலீடு செய்யக் கோரவில்லை” எனத் தெரிவித்துள்ளார். எனினும், ஈரானின் அணுசக்தித் திட்டங்களை முழுமையாகக் கைவிடுவது போன்ற கடுமையான நிபந்தனைகளுக்கு ஈரான் கட்டுப்பட்டால் மட்டுமே இந்த நிதியத்தைப் பயன்படுத்த முடியும் என அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) சுட்டிக்காட்டியுள்ளார்.
நான்கு தசாப்தங்களாக சர்வதேச தடைகளால் முடங்கிக் கிடந்த ஈரானியப் பொருளாதாரத்திற்கு இந்த முதலீடு ஒரு அசுர பலத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே இரண்டாவது பெரிய இயற்கை எரிவாயு இருப்பையும், நான்காவது பெரிய கச்சா எண்ணெய் இருப்பையும் கொண்டுள்ள ஈரானில், போரினால் சேதமடைந்த விமான நிலையங்கள், சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் மொபாரகே எஃகு தொழிற்சாலை (Mobarakeh Steel) போன்ற உட்கட்டமைப்புகளை சீரமைக்க தென்கொரியா, ஜப்பான், சிங்கப்பூர், மலேசியா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்யப் போகின்றன.
இந்தத் திட்டம் தற்போதைக்கு ஒரு வரைபு மட்டுமே. எதிர்வரும் வெள்ளிக்கிழமை கையெழுத்தானதும், அடுத்த 60 நாட்களுக்குள் முதலீட்டாளர்களும் ஈரானிய அதிகாரிகளும் ஒன்றிணைந்து இதற்கான திட்டங்களை இறுதி செய்வார்கள். பாகிஸ்தான் நாட்டின் மத்தியஸ்தத்துடன் நகரும் இந்த மெகா டீல், வளைகுடா பிராந்தியத்தில் மாத்திரமன்றி உலக அரசியல் சதுரங்கத்திலேயே ஒரு பாரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.


