இலங்கையின் வர்த்தகக் கட்டமைப்பு மற்றும் வரி செலுத்தும் நடைமுறைகளில் பாரிய திருத்தத்தை ஏற்படுத்தும் வகையில், புதிய பெறுமதி சேர் வரி (VAT) இன்வொய்ஸ் முறை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் கட்டாயமாக்கப்படவுள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக நாட்டின் வரி வசூல் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நிதிப் பரிவர்த்தனைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி இதற்கான ஆரம்ப வரைபு அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், வர்த்தக சமூகத்தினரின் நடைமுறைச் சவால்கள் காரணமாக ஆரம்பத்தில் திட்டமிடப்பட்ட ஜூலை 1 நடைமுறைப்படுத்தல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
தமது நிறுவனங்களின் கணக்கியல் மென்பொருட்கள், பில்லிங் அமைப்புகள் மற்றும் டிஜிட்டல் கட்டமைப்புகளைப் புதிய VAT வடிவமைப்புக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கு மேலதிக அவகாசம் தேவை என வர்த்தகர்கள் விடுத்த கோரிக்கையையே உள்நாட்டு இறைவரித் திணைக்களம் பரிசீலித்திருந்தது. அந்த வகையில் வழங்கப்பட்ட சலுகைக் காலம் தற்போது முடிவுக்கு வரவுள்ள நிலையில், அனைத்து வர்த்தக நிறுவனங்களும் ஒக்டோபர் 1ஆம் திகதிக்கு முன்னர் உரிய தொழிநுட்ப மாற்றங்களை நிறைவு செய்ய வேண்டும் எனத் திட்டவட்டமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அதிரடி மாற்றத்திற்குப் பின்னணியில் மிக முக்கியமான வரி சீர்திருத்த நோக்கம் ஒன்று காணப்படுகின்றது. சந்தையில் புழங்கும் போலியான இன்வொய்ஸ்களை முற்றாக ஒழிப்பது, அனைத்து வணிகப் பரிவர்த்தனைகளையும் உடனுக்குடன் (Real-time) கண்காணிப்பது மற்றும் வரி வருமானம் கசிவதைத் தடுப்பதே இதன் இறுதி இலக்காகும்.
வரி ஏய்ப்பைத் தடுத்து நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தும் இந்த டிஜிட்டல் முறைமைக்குத் தங்களை உடனடியாகத் தகவமைத்துக் கொள்ளுமாறு அனைத்து வர்த்தகர்கள் மற்றும் வரி செலுத்துவோருக்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.


