மதுரங்குளி-தொடுவா பிரதான வீதியின் சிறிய பாலத்திற்கான திருத்தப் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்காக போடப்பட்ட தற்காலிக பாதை அண்மையில் பெய்த மழையில் அடித்துச்செல்லப்பட்டது.
மதுரங்குளி வர்த்தக சங்கத்தின் அனுசரணையில் சுமார் மூன்று மில்லியன் செலவில் நிர்மாணிக்கப்பட்ட குறித்த தற்காலிக பாதையே இவ்வாறு மழை நீரில் அடித்துச்செல்லப்பட்டது.
இதனால் மதுரங்குளி-தொடுவா பிரதான வீதியின் போக்குவரத்துக்கள் முற்றாக பாதிப்புக்குள்ளானதுடன், மதுரங்குளி வர்த்தக நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.
நிலைமையை கருத்திற்கொண்டு பாதிக்கப்பட்ட குறித்த தற்காலிக வீதி, மதுரங்குளி வர்த்தக சங்கத்தின் தலையீட்டில் மீண்டும் திருத்தம் செய்யப்பட்டு மக்கள் பாவனைக்காக நேற்றுமுதல் மீண்டும் மக்கள் பாவனைக்கு திறக்கப்பட்டது.
முஸ்லிம்களின் பண்டிகை எதிர்வரும் தினங்களில் வர இருப்பதனால், முஸ்லிம்கள் செறிந்து வாழும் குறித்த பிரதேசத்தின் நிலைமையை கருத்திற்கொண்டும், மக்களின் போக்குவரத்து தேவையை பூர்த்திசெய்யவும் மதுரங்குளி வர்த்தக சங்கம் துரிதமாக செயற்பட்டு குறித்த தற்காலிக வீதியை மீண்டும் செப்பனிட்டமைக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

