மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பிரதான வருமானமான தேயிலைத் துறை கடும் சரிவைச் சந்தித்து வருவதாக இலங்கை தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லயனெல் ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தாழ் நில தேயிலையில் நூற்றுக்கு 50 வீதத்திற்கும் அதிகமான அல்லது அதற்கும் மேற்பட்ட அளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அதிலிருந்து ஈரானுக்கு 10 முதல் 15 வீதத்திற்கும் அதிகமான அளவு செல்கிறது. அந்த நாட்டிற்கு நாம் அதிக விலையுடைய தேயிலையையே அனுப்புகின்றோம்.
அவர்களது யுத்த நிலைமை காரணமாக தேயிலை வாங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்குமான கடல் மார்க்கங்கள் தடைப்பட்டுள்ளதால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இது எங்களைப் பாதிப்பது எவ்வாறெனில், சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு வாராந்தம் அவர்களது கொடுப்பனவுகளை வழங்க வேண்டியுள்ளது.
தேயிலை விற்பனை ஆகாவிட்டால் எங்களால் அதனை வழங்க முடியாது. இது தொடர்ந்தால் மிகவும் பாரிய நிதி நெருக்கடியை நாம் எதிர்கொள்ள வேண்டி வரும்.
இலங்கையில் சுமார் 5 இலட்சம் சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்கள் உள்ளனர். இத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு சுமார் 2 மில்லியன் பேரின் வாழ்வாதாரமாகவும் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


