ஜூட் சமந்த
மாரவில, கட்டுநேரிய பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் ஒருவரால் தனது மனைவி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று மார்ச் முதலாம் திகதி இரவு 11.40 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மாரவில பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்தக் கொடூரக் கொலையில் உயிரிழந்தவர் கட்டுநேரிய – பாங்கட சந்தியில் வசித்து வந்த 44 வயதான அதிகாரி முதியன்சேலாகே துஷாரி அதிகாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, படுக்கையறையில் வைத்து கணவன் தனது மனைவியின் கழுத்தைக் கத்தியால் அறுத்துக் கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவத்தின் பின்னர் சந்தேக நபரான கணவன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதுடன், அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கும், கைது செய்வதற்குமான விசேட விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் நடத்தப்படவுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



