நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்துமாறு பெஃப்ரல் அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
அறிக்கையொன்றை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ள, அந்த அமைப்பு இறுதியாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெற்றதுடன், அதன் பின்னர் 11 வருடங்களாக எந்தவொரு மாகாணசபை தேர்தலும் நடைபெறவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண சபை மற்றும் தேர்தல் திருத்தச் சட்டம் ஊடாக மாகாண சபை தேர்தல் முறைமை திருத்தப்பட்டமையும், அது தொடர்பான சட்ட ஏற்பாடு மற்றும் எல்லை நிர்ணய செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாமையும், மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தியுள்ளது.
தற்போதுள்ள சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆறு வருடங்களுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், எனினும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் தேவையான சட்ட மற்றும் நிர்வாக செயல்முறைகளை முன்னெடுக்க தவறியுள்ளன.
தற்போதைய அரசாங்கம் இந்த தேர்தல் தாமதத்துக்கு பொறுப்பல்ல என்ற போதிலும் தேர்தலை நடத்துவதிலுள்ள தடையை நீக்கி, தேர்தலை நடத்த வழிவகுப்பது அதன் பொறுப்பாகும்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சட்டத்திருத்தத்துக்காக தற்போது, இரண்டு தனிநபர் பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன.
எனவே, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சர் அது குறித்து ஆராய்ந்து, அவசியமான திருத்தங்களை மேற்கொண்டு, அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாகாண சபை முறைமை தொடர்பில் அல்லது மாகாண சபை தேர்தல் முறைமை தொடர்பில் ஏதேனும் சிக்கல் இருப்பின், அது குறித்து விரைவில் கலந்துரையாடி தீர்க்க முடியும்.
உடனடியாக தேர்தலை நடத்துவதற்காக பழைய முறைமையில் தேர்தலை நடத்த, குறுங்கால சட்டதிருத்தமொன்று பொருத்தமானது என பெஃப்ரல் அமைப்பு பரிந்துரைக்கிறது.
அத்துடன், பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த குறுங்கால திருத்தமொன்று கொண்டுவரப்படுமாயின், பெண் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காக, வேட்புமனுவில் 25% ஒதுக்கீட்டையும் அதில் உள்ளடக்க வேண்டும் எனவும் பெஃப்ரல் அமைப்பு கோரியுள்ளது.