ஜுட் சமந்த
பாடசாலைச் சீருடைகளுக்குப் பின்னால் பதுங்கி நின்று, அப்பாவி மாணவர்களின் எதிர்காலத்தையே சீரழிக்கும் பேராபத்தாக உருவெடுத்துள்ள போதை மாபியாவின் அதிர்ச்சியூட்டும் வலைப்பின்னலொன்று கல்பிட்டியில் வைத்துத் தகர்க்கப்பட்டுள்ளது.
கல்பிட்டி, அல்மனார் பகுதியில் செப்டம்பர் 19ஆம் திகதி மாலை முன்னெடுக்கப்பட்ட இரகசியச் சுற்றிவளைப்பின் போது, சந்தேகத்திற்கிடமான நபரொருவரை புத்தளம் பிராந்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினர் சுற்றிவளைத்துக் கைது செய்தனர். 38 வயதுடைய அந்நபரைச் சோதனையிட்ட அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது; அவரிடமிருந்து சட்டவிரோதமாகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 போதை மாத்திரைகள் (Drug Capsules) உடனடியாகக் கைப்பற்றப்பட்டன.
விசாரணைகளில் வெளிவந்த உண்மைகள் பெற்றோர்களின் நெஞ்சைப் பதைபதைக்க வைத்துள்ளன. கல்பிட்டி நகரப் பகுதியிலுள்ள முக்கிய ஆண் பாடசாலை மாணவர்களைப் பிரதான இலக்காகக் கொண்டே இந்த நச்சு வியாபாரத்தைச் தான் தீவிரமாக முன்னெடுத்து வந்ததாகச் சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இளம் தலைமுறையினரைத் திட்டமிட்டு அடிமையாக்கும் இத்தகைய வலையமைப்பு பாடசாலைகளைச் சுற்றி எவ்வாறு வேரூன்றியுள்ளது என்பதனை இந்தச் சம்பவம் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது.
புத்தளம் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கபில பிரேமதாஸவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் இந்த அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரும், கைப்பற்றப்பட்ட 500 போதை மாத்திரைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் கல்பூட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


