கிளிநொச்சியில் ஆபத்தான நிலையில் அதிக பயணிகளை ஏற்றிச் சென்ற அரச பேருந்து
கிளிநொச்சி முழங்காவில் பகுதியிலிருந்து நேற்று (15) பகல் 1.30 மணியளவில்
கிளிநொச்சி நோக்கி புறப்பட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான
பேருந்து ஒன்று, ஊற்றுப்புலம் சந்தியை கடந்து மிகவும் ஆபத்தான நிலையில்
அதிகளவு பயணிகளை ஏற்றிக்கொண்டு பயணித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேருந்தில் அதிகமான பயணிகளை ஏற்றியுள்ளதோடு, பேருந்தின் இரண்டு
வாசல்களிலும் பயணிகள் தொங்கிய நிலையில் பயணம் செய்ததோடு பேருந்தின் பின் பகுதியிலும் நின்ற நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் பயணம் செய்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் இதே போன்று குறித்த வழியாக தனியார் பேருந்து ஒன்று இவ்வாறு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்றதன் காரணமாக குறித்த பேருந்தின் வழி அனுமதி சில காலங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டதோடு, நடத்துநர் மற்றும் சாரதிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது என தனியார் பேரூந்து சங்கத்தினர் தெரிவித்தனர்.
பொது மக்களின் பாதுகாப்பு கருதி பேருந்து நடத்துனர்கள் மற்றும் சாரதிகள்
பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும் எனவும் பலரும் தெரிவித்துள்ளனர்.