QR குறியீட்டு முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இன்று (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், இன்று காலை 8:00 – 9:00 மணியளவில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் QR குறியீட்டு முறையுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய தற்போது விநியோக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
இந்த முறையின் கீழ் எரிபொருள் விநியோகிக்கப்பட்டாலும், கேன்கள் மற்றும் போத்தல்களுக்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
பொதுமக்கள் தமது சொந்த வாகனங்களில் வந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், ஒருவரின் QR குறியீட்டைப் பயன்படுத்தி வேறு வாகனங்களுக்கு எரிபொருள் கோரினால் அதனை வழங்கப்போவதில்லை என எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தீர்மானித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்: “புதிதாக வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்களுக்கு QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல்கள் இருப்பதாகப் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அதற்கு அரசாங்கம் விரைவில் தீர்வை வழங்கும் என எதிர்பார்க்கிறோம். தற்போது QR முறைமை வெற்றிகரமாகச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்களுக்குப் பாரிய பொறுப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் தமக்குரிய QR குறியீட்டுடன் தமது வாகனத்திலேயே வருகை தந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.”


