தித்வா புயல் பாதிப்பு: கல்பிட்டி மக்களுக்கு இரண்டாம் கட்ட இழப்பீட்டு காசோலைகள் வழங்கி வைப்பு!
கல்பிட்டி: ‘தித்வா’ புயலின் கோரத்தாண்டவத்தால் வீடுகளையும், வாழ்வாதாரங்களையும் இழந்து தவித்த கல்பிட்டி மக்களுக்குப் புதிய நம்பிக்கையூட்டும் வகையில், இரண்டாம் கட்ட இழப்பீட்டு காசோலைகள் வழங்கும் நிகழ்வு இன்று (16.06.2026) செவ்வாய்க்கிழமை மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
நாடாளுமன்ற மற்றும் அரச முக்கியஸ்தர்களின் பங்கேற்புடன் கல்பிட்டி பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்ற இந் நிகழ்வு, பாதிக்கப்பட்ட மக்களின் முகங்களில் புன்னகையை வரவழைக்கும் தருணமாக அமைந்திருந்தது.
தலைவர்களின் முன்னிலையில் மக்கள் கைகளில் சேர்ந்த நிதியுதவி
பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்பிட்டி மற்றும் புத்தளம் பிரதேச செயலக அபிவிருத்தி குழு தலைவருமான சகோதரர் எம்.ஜே.எம்.பைசல் ஆகியோரின் கூட்டுத் தலைமையில் இந்த காசோலை வழங்கும் பணி மிகச் சிறப்பாக அரங்கேறியது.
தித்வா புயலால் முழுமையாகவும், பகுதியளவிலும் சேதமடைந்த வீடுகளின் உரிமையாளர்களுக்கும், கடுமையாகப் பாதிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கும் அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக இந்த இரண்டாம் கட்ட காசோலைகள் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டன.
அரசின் இந்த துரித நிவாரணப் பணிக்கு வலு சேர்க்கும் வகையில், கல்பிட்டி பிரதேச சபையின் தலைவர் சகோதரர் A.S.M. றிகாஸ், கல்பிட்டி அமைப்பாளர் சகோதரர் சஞ்சீவ மற்றும் கல்பிட்டி பிரதேச செயலாளர் D.A. பிரியதர்ஷினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அவர்களுடன் பிரதேச சபை உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள், பிரஜா சக்தி (CDC) தலைவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


